நாம் கோரினால், இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டு விடும்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முடிக்கும்படி நாம் கோரினால், இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டு விடும். ஐ.நா கண்காணிப்பின் கீழ் இலங்கை தொடர வேண்டும் என்பதாலேயே, மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

நேற்று மாலை (15) கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.

“ஜெனீவாத் தீர்மானம் சம்மந்தமாக முரண்டுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இதில் காலஅவகாசம் வழங்குவது என்ற அர்த்தத்தில் சொல்வது தவறென நினைக்கிறேன். 30 1 34 1 பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கை அதற்குள் ஒப்புக்கொண்டவற்றை செய்யவில்லை.

அதற்காக அந்த விடயத்தை அப்படியே கைவிடுவதா, அல்லது மேலும் சில இறுக்கமான நிபந்தனைகளுடன் புதிய தீர்மானத்தை கொண்டு வருவதா? இப்பொழுது புது தீர்மானமொன்றை ஐந்து நாடுகள் சேர்ந்து கொண்டு வருகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதே இப்போது சர்ச்சையாகியுள்ளது.

இதை நாம் ஏற்கவில்லையென்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை மீது அழுத்தங்கள் கொடுக்க, தலையீடு செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடும்.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை விரும்பினால், இந்த தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும். அண்மையில் தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டு அனுப்பிய மனுவிலும், இங்கு பிரத்தியேக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

ஒப்புக் கொண்டவற்றை இலங்கை நிறைவேற்றுகிறதா என்பதை அவர் 6 மாதங்களிற்கு ஒருமுறை அறிக்கையிட வேண்டும். யுத்தக்குற்ற விவகாரங்கள் பாதுகாப்பு சபை அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதில் வைக்கப்பட்டுள்ளது.

காலஅவகாசம என்பதை விட, கால அட்டவணையென்று கோரப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் உடனடியாக நடக்கலாம், சில வேளை வருடக்கணக்கான இழுபறிப்பட்டு நடக்கலாம். நாம் தொடர்ந்து அந்த கோரிக்கையுடன் இருக்கிறோமா என்பதே முக்கியம். ஐநா தீர்மானங்களை நீர்த்து போக செய்யாமல், எமது இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்“ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.