மசூத் அஸார் விவகாரத்தில் முன்னேற்றம்-சீனா தகவல்!

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் நடவடிக்கைகள் தவறான உதாரணமாக இருப்பதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளுடனும் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது அமெரிக்காவுக்கும் தெரியும்.
ஆனால், அதையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலேயே வரைவு தீர்மானத்தை, அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. இது பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை மீறிய செயலாகும். அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்த விவகாரத்தில் தவறான முன் உதாரணமாகத் திகழ்கின்றன. அமெரிக்காவின் வரைவு தீர்மானம், தீர்வு எட்டப்படுவதில் மேலும் சிக்கலையே உருவாக்கும். முக்கியமாக தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொண்டுவருவது அவசியம். எனவே, அமெரிக்காவின் வரைவு தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து, அல்-காய்தா தடை ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படியே, இந்த விவகாரத்தில் தீர்வு எட்ட முடியும் என்று சீனா கருதுகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பெரும்பான்மை நாடுகள், அமெரிக்காவின் வரைவு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா நேரடியாக வழங்கியது. இதற்கு சீனா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.