நல்லை ஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் - ஆளுநர் சந்திப்பு!!(படங்கள்)

 நல்லை ஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது.


யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் அண்மைக்காலமாக  மதங்களுக்கிடையில்  தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பிலும் அதனை எவ்வாறு இல்லாமல் செய்து வடமாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும் என்பது தொடர்பிலும்  ஆராயப்பட்டது.

மேலும், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தினை புனிதபூமியாக பிரகடனப்படுத்துமாறு ஆலய நிர்வாக சபையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் சில நாட்களில் ஆலய நிர்வாகத்தினரையும் பிரதம குருக்களையும் சந்திக்க இருப்பதாகவும் , ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் இது தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை வடமாகாணத்தில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்து மாநாடு ஒன்றினை நடத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் மிகவிரைவில் வடக்கில் இந்து மாநாடொன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது , ஆளுநர் அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மக்களுக்கு மிகுந்த ஆக்கபூர்வமாக காணப்படுவதனை தான் உணர்ந்துள்ளதாக குறிப்பிட்ட நல்லை ஆதீன பிரதம குருக்கள் மக்களுக்கான இந்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.