அதர்வாவின் 100: தீர்ந்தது சிக்கல்!
அதர்வா , ஹன்சிகா இணைந்து நடித்துள்ள 100 திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 70 எம் எம் எண்டர்டெய்ன்மன்ட் பங்குதாரர் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், “சமீபத்தில் வெளியான பலூன் திரைப்படத்தை வெளியிடும் உரிமை எங்களது நிறுவனத்திடம் இருந்தது. இந்த உரிமையை எங்களிடம் இருந்து எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம் வாங்க ரூ.6 கோடியே 30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி எம் ஜி ஆரா நிறுவனம் ரூ.5 கோடியே 18 லட்சத்தை வழங்கிவிட்டு, எஞ்சிய ரூ.1 கோடியே 12 லட்சத்தை பலூன் திரைப்படம் வெளியாகும் முன் வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் பலூன் திரைப்படம் வெளியான பின்னரும் அந்த தொகையை திரும்ப வழங்கவில்லை.
இந்த தொகையை நடிகர் அதர்வா நடித்துள்ள ‘100' திரைப்படத்தை தயாரிக்க செலவிட்டுள்ளனர். இந்த 100 திரைப்படம் மே 3ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. எனவே எங்களுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையைத் திரும்பத் தராமல் 100 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, எம்.ஜி.ஆரா பட நிறுவனத்தின் சார்பில் எஞ்சிய 1 கோடியை ருபாயை திருப்பிக் கொடுப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 100 படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை