துட்டகைமுனு பௌத்த தமிழன்… இலங்கையின் ஆதிக்குடிகள் சைவசமயிகளே!!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தானே கேட்டு, தானே பதிலளிக்கும் இந்த வார கேள்வி பதிலை வெளியிட்டுள்ளார்.
கேள்வி: இன்றைய சூழலில் நான் கேட்கும் கேள்வி பிழையானதாகச் சிலரால் பார்க்கப்படலாம். ஆனால் இன்றையகால சூழலை வைத்து இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற கருத்தை வலியுறுத்த தெற்கில் பலரும் எத்தனிக்கின்றார்கள். அண்மையில் ஆண்டகை மல்கம் இரண்ஜித் போன்றவர்கள் இந்தக் கருத்தை ஒத்துக்கொண்டுள்ளமை அவர்களின் கருத்தை மேலும் வலுவாக்கியுள்ளது. “தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் “எமது” நாட்டை ஆளப்பார்க்கின்றார்கள். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாம் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளியோம்” என்ற விதத்தில் பௌத்த பிக்குமார்கள் மிக ஆக்ரோசமாகக் கூறி வருகின்றார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? இலங்கை பௌத்த சிங்கள நாடா?
பதில்: இலங்கையானது அதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்குஞ் சொந்தம். தனி இனமோ மதமோ அதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல்லினம் வாழும், பல மதங்கள் நிலவும், பன் மொழிகள் பேசப்படும் நாடு. இலங்கை பௌத்த சிங்கள நாடு என்று கூறுவதின் காரணம் என்ன என்று நாம் பரிசீலிக்க வேண்டும். அதாவது இலங்கை பௌத்த சிங்கள நாடு, மற்றைய மத, இன, சமூக மக்கள் வந்தேறு குடிமக்கள். அவர்களுக்கு நாம் பார்த்துக்கொடுத்தால்த்தான் உரிமைகள் கிடைக்குமே ஒளிய தாமாக அவர்கள் எதனையுங் கொண்டிருக்கவில்லை என்ற அடிப்படையிலேயே இவ்வாறு புத்த பிக்குகளாலும் மற்றையோராலும் சொல்லி வரப்படுகிறது. இது உண்மையில் இலங்கையில் சிறுபான்மையினரை அடிமைப்படுத்த, பயப்படுத்த, அந்நியப்படுத்த எடுத்து வரப்படும் நடவடிக்கைகள்.
பிரச்சினைகள் ஏற்பட்டதே இவ்வாறான பேச்சுக்களாலும் சிந்தனையாலுமே. கடந்த நூறு வருடங்களாக பெரும்பாலும் பௌத்த பிக்குகளும் மற்றும் சிங்கள பௌத்த புத்திஜீவிகள் சிலரும் சிங்கள மக்களிடையே மூளைச்சலவை செய்து இவ்வாறான தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். எவ்வாறு சில இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பிறமத அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தால் தமக்கு சொர்க்கத்தில் 72 கன்னியருடன் வாழ இடம் கிடைக்க வைக்கும் என்ற கருத்தில் ஊறவைக்கப்பட்டார்களோ அதேபோல சிங்கள பௌத்தர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டு 1919க்குப் பின்னர் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமே என்ற கருத்துக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் உண்மை அதுவல்ல.
இந் நாட்டின் பூர்வீகக் குடி மக்கள் இந்துத் தமிழ் மக்களே. அவர்கள் புத்த பிரான் பிறக்க முதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்து சமுத்திரத்தில் இடம் அமைந்திருந்து கடல் கொண்ட குமரிக் கண்டத்துடன் அவர்கள் பூர்வீகம் தொடர்புடையது. இலங்கையைப் பாதுகாக்கும் 5 ஈஸ்வரங்களான முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகியவற்றில் காணப்பட்ட சிவலிங்கங்கள் புத்த காலத்திற்கு முன்பிருந்தே இங்கு எழுந்தருளி இருந்தவை. இன்று தெவிநுவர அல்லது டொன்றா என்று அழைக்கப்படும் விஷ்ணு கோயில் தொண்டீஸ்வர சிவலிங்கத்தின் மேல் கட்டப்பட்ட கோயிலாகும்.
பௌத்தமானது இலங்கைக்குக் கொண்டு வந்த போது அம் மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள். அக்கால கட்டத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்று வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் பௌத்த எச்சங்கள். இவை தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த எச்சங்களே. சில வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின “தெமள பௌத்தயோ” (தமிழ் பௌத்தர்கள்) என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார். தமிழர்கள் பௌத்தர்களாக ஒரு காலத்தில் வாழ்ந்து வந்தமை பற்றி அந் நூலில் அவர் ஆராய்ந்துள்ளார். “தெமள பௌத்தயோ” காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்து சமயத்தை மீண்டும் தழுவினர்.
இவ்வளவுக்கும் சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது கி.பி. 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் பாளி மொழியிலேயே எழுதப் பட்டது. அப்போது சிங்கள மொழி பிறக்கவில்லை. இந் நாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியை அத்திவாரமாக வைத்து அதன் மேல் பாளி மொழியினால் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த மொழியே சிங்கள மொழி. பாளி மொழியில் சிகல என்றால் சிங்கம். முதன் முதலில் சிகல என்ற சொல் கி.பி. 4ம் 5ம் நூற்றாண்டுகளின் படைப்பான பாளி மொழியில் வெளிவந்த தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது சிங்கங்கள் அந்தக் காலத்தில் இங்கிருந்ததாலோ என்னவோ இந்தத் தீவு சிகல என்று அழைக்கப்பட்டது எனப்படுகிறது. 5ம் – 6ம் நூற்றாண்டுகளில் வெளிவந்த பாளி மொழிப் படைப்பான மகாவம்சத்தில் இரண்டு தடவைகள் சிகல என்ற சொல் பாவிக்கப்படுகிறது. சிங்கள மொழியோ சிங்கள இனமோ இந்த இரண்டு பாளி மொழி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இந்த இரு நூல்களின் பின்னரே சிங்கள மொழி திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டது.
எச்.ஏ.ஜே.ஹூலுகல்ல 1947ல் வெளிக் கொண்டு வந்த “சுற்றுலாப் பயணிகளுக்கான செய்திகள்” என்ற குறு நூலில் சிங்களவர்கள் ஒரு கலப்பு இனம் என்றும், சிங்கள மொழியானது பெரும்பாலும் தமிழ் மொழியால் வளமாக்கப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.
முதலியார் டபிள்யு. எஃப். குணவர்தன அவர்கள் “சிங்கள மொழியானது அடிப்படையில் ஒரு திராவிட மொழி. அதன் அடித்தளம் திராவிடம். அதன் மேல் கட்டப்பட்ட ஆரிய மொழியொன்றைச் சேர்ந்ததே சிங்கள மொழி” என்று கூறியுள்ளார். அந்த ஆரிய மொழியே பாளியாகும். பௌத்தத்தைக் கொண்டு வந்தவர்கள் பாவித்தது பாளி மொழியையே. ஆனால் அக்கால மக்கள் பாவித்த மொழி தமிழ். தமிழும் பாளியும் கலந்ததே சிங்கள மொழி. அது 6ம் – 7ம் நூற்றாண்டுகளிலேயே மொழி அந்தஸ்தை அடைந்தது. பாளியில் இருந்து வந்த படியால் ஆதி சிங்கள மொழி பாளி காலத்திலேயே இருந்து வந்தது என்று சிலர் கூறுவது நகைப்புக்குரியது. “என்னுடைய தாத்தா 100 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தார். ஆகவே நான் நூறு வருடங்களுக்கு முன்னரே இருந்து வாழ்ந்து வருகின்றேன்” என்று கூறுவது போல் இருக்கின்றது!
மேலும் துட்டகைமுனுவை சிங்கள அரசன் என்று குறிப்பிடுவது பிழையானது. எல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனு பௌத்த தமிழன் என்பதே உண்மை.
ஆகவே சரித்திர ரீதியாகப் பார்த்தால் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழி பேசிய இந்துக்களே. இந்துக்கள் என்பதிலும் பார்க்க சைவசமயிகளே என்று கூறினால் அதுவே பொருத்தமானது.
அன்று தொடக்கம் அதாவது புத்த காலத்திற்கு முன்பிருந்தே தற்காலத்தில் சுமார் நூறு இருநூறு வருடங்களுக்கு முன் வரையில் மேற்கில் நீர்கொழும்பில் இருந்து வடபால் நோக்கிப்பரந்து கிழக்கில் கதிர்காமம் வரையில் தொடர்ந்து வியாபித்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்களே. இன்றும் வடகிழக்கு மாகாணங்களின் பெரும்பான்மையர் தமிழர்களே. சிங்கள மக்கள் என்றுமே வடக்கில் வியாபித்து வாழவில்லை.
உண்மையில் 1956ம் ஆண்டு “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டுவரப்பட்ட போது வடகிழக்கிற்கு தமிழ் மொழியே உத்தியோக பூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது இலங்கை சமசமாஜாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அன்று கூறியவாறு தமிழ், சிங்களம் இரு மொழிகளுக்கும் நாடு பூராகவும் சம அந்தஸ்து வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வலுக்கட்டாயமாக சிங்களத்தை ஒரேயொரு உத்தியோகபூர்வ மொழியாக இலங்கை பூராகவும் பிரகடனம் செய்தமை இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்ற உள்ளூர ஆவலும், ஆசையும், அவசரமும் அவர்களுக்கு இருந்தமையை எடுத்துக் காட்டுகின்றது.
அதாவது இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல. ஆனால் அதனை சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்து பல சிங்கள அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் பீடித்துள்ளமை தெரிய வருகின்றது. புத்தரின் பல்லை (தாது) யார் வைத்திருக்கின்றார்களோ அவர்களே நாட்டை ஆள வேண்டும் என்ற ஒரு பரம்பரைக் கருத்து நிலவுவதை வைத்து இவ்வாறான சிந்தனை ஏற்பட்டிருக்கலாம்.
இதனால்த்தான் தெலுங்கு நாயக வம்சத்தைச் சேர்ந்த கண்டிய அரசர்கள் புத்தரின் பல்லைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு புத்த மதத்திற்கு சகல நன்மைகளையும் செய்து வந்தார்கள். கடைசி கண்டிய மன்னன் கண்ணுத்துரையே ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் என்ற பெயரை ஏற்றிருந்தான்.
ஆகவே இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல. இலங்கையின் மொத்த சனத் தொகையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் சிங்கள பௌத்தர்கள் என்ற முறையில் இது சிங்கள பௌத்த நாடென்றால் வட கிழக்கை சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தமைப்புக்கு வெளியே எடுத்து அதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம். ஏன் என்றால் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்கள் பௌத்தத்தைத் தழுவி பின்னர் கைவிட்டார்கள். இப்போது அவர்கள் இந்துக்கள். மேலும் கிறீஸ்தவர்களும் முஸ்லீம்களும் இங்கு வாழ்கின்றார்கள். வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது மீண்டும் அவர்கள் மத்தியில் பௌத்தத்தை திணிக்க எண்ணுவது அறமல்ல. அறிவுடை செயலல்ல. இதனால்த்தான் நாங்கள் வடகிழக்கை இணைத்து தமிழ் மக்களின் தாயகப் பகுதியை அடையாளஞ் செய்து அதற்கென ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றோம். அந்தக் கட்டமைப்பினுள் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டு வருகின்றோம். எமக்கு அவ்வாறான ஒரு அரசியல் தனித்துவம் தரப்பட்டால் எமது அலகு சமயச் சார்பற்ற ஆனால் எல்லா சமயங்களையும் சமமாகக் கருதும் ஒரு அலகாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி,
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.