உண்மையான வீரரின் எச்சம்!!

முள்ளிவாய்க்கால் போர் முடிந்து
பத்து வருடங்களில்
வரிப்புலிச்சீருடையுடன் ஒரு எலும்புக்கூடு மீண்டது
பாம்பு செட்டை உதிர்ந்த இடங்களில்
பாம்புகள் குடியிருப்பதாய்
எமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு
காலம் உதிர்ந்ததாய்
சீருடையுடன் எலும்புக்கூடு
எங்கள் ஊரில்
ஒரு புதிய பேச்சு வழக்கை தொடக்கிற்று
புலியிருந்த நிலம் எனத்தொடங்கிப் பேசப்படும் அது

எலும்புக்கூடு என்று சொல்ல
பலரையும் போல எனக்கும் மனம் ஒப்பவில்லை
ஒரு களத்தில் வீழ்ந்த போராளியின்
வித்துடலுக்கு கொடுத்த மரியாதையை
நாம் எமது ஊரில் கடவுளுக்கும் கொடுத்ததில்லை
நடுகல் பண்பாட்டின் வழி
வித்துடல் பண்பாட்டில்
நாம் வாழ்ந்து இருந்துவிட்டோம்
எமது போர்ப்பரணியில் ஒரு படலத்தில் தலைப்பாய்
இன்று இந்த வீரரின்  எச்சம்

ஒரு உண்மையான போராளியின்
வர்ணங்களை அடையாளத்தை
மீண்டும் முள்ளிவாய்க்காலில்
பத்து ஆண்டு கழித்து காண நேரிட்டபோது
ஓ உண்மையான புலிவீர!
நீ வாழ்ந்த வீழ்ந்த மண்ணில்
நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்காய் பெருமிதப்படுகின்றேன்

பலர்
எதிரிகளுக்குள் சரணாகதி
அடைந்து கொண்டிருந்த தருணத்தில்
சீருடையோடும் குண்டோடும்
பயிற்சிப் பாசறையில் சத்தியப்பிரமாணம் செய்து
கழுத்தில் கட்டிக்கொண்ட சயனைட்டோடும்
நீ சன்னங்கள் தாங்கி வீழ்ந்திருந்தாய் எனும்போது
சத்தியவான் ஒருவனை நான்
முள்ளிவாய்க்காலில் பூமிக்கு காட்டுகின்றேன்
இறுதி வரை போராடித் தோற்றார்கள்
இதோ முள்ளிவாய்க்காலில் ஒரு பெரிய உதாரணம்
ஒரு புலிவீரனின் சத்தியத்தை
எந்த வல்லரசாலும்
தோற்கடிக்க முடியவில்லை என்பதற்கு
இதோ ஒரு வீரபுருசரின் சீருடை தரித்த எலும்புக்கூடு

எனது காதுகளில்
ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை
எனக்கு தா
அந்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்கின்றது
பாடல் முடிந்தும்
உன்னை சுமந்து செல்ல தடுமாறுகிறேன்
முள்ளியவளைக்கா தேராவிலுக்கா தரவைக்கா
சாட்டிக்கா உயிலங்குளத்துக்கா கனகபுரத்துக்கா
எங்கு
உன்னை விதைப்பதற்கு
என் மனதை தவிர வேறிடமில்லை



ஆக்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.