கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம். சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகரிலுள்ள எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி நடைபாதை அமைக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மெரினா கடற்கரையானது மத்திய சுற்றுச்சூழல் துறையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. இதனால், இது குறித்த பரிந்துரையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது சென்னை மாநகராட்சி.

 இதேபோல பெசன்ட் நகர் கடற்கரையில் சக்கர நாற்காலியில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை செல்ல பாதை அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் அமரவும், அவர்களுக்கென நிழற்குடை, கழிவறை உள்ளிட்ட வசதிகளைச் செய்து தரவும் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்தது.

சுதேசி தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் இவற்றை அமைக்கவிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. தற்போது, இதற்கு அனுமதி வழங்கியுள்ளது கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம். இதனால், விரைவில் இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.