அதிமுக மக்களவை குழுத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்!
மக்களவையில் அதிமுக மக்களவை குழுத் தலைவராக தேனி தொகுதி அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தேர்தலுக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 17ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து, புதிய எம்.பிக்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மக்களவை குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அதிமுக சார்பில் மக்களவை குழுத் தலைவராக ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை