மீன்பிடித்தொழிலை பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!!

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கி பாதுகாப்பளிக்க வேண்டுமென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்வதால் அவர்களின் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும். குறிப்பாக மீனவர்கள் 60 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில் தற்போது மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில் மீனவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால் அவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிய மீன்பிடி படகுகளை கடலில் செலுத்துவதற்கு அரசிடம் அங்கீகாரம் பெற முடியாமல் இருப்பது மீனவர்களுக்கு வேதனை அளிக்கிறது. மேலும், படகுகளுக்கு பதிவு எண் வழங்குவதுமில்லை என கூறப்படுகிறது. படகுகளுக்கு பதிவு எண் கிடைக்காத நிலையில் காப்பீடும் செய்ய முடியாது. இவ்வாறு படகுகளுக்கு பதிவு எண் கிடைக்காமல், காப்பீடும் செய்ய முடியாமல் இருக்கிற வேளையில் மீன்பிடிப் படகுகளை கடலோரக் காவல் படையினர் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் படகுகளை இயக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருபுறம், டீசல் விலையேற்றம் என்றால் மறுபுறம் படகுகளை பதிவு செய்யவே முடியாத நிலை. இந்தச் சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே, படகுகளுக்கு பதிவு எண் வழங்கவும், படகுகள் கடலுக்குச் செல்லும்போது பாதுகாப்பு கொடுக்கவும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக, லாபகரமாக நடைபெறுவதற்கும் பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அவற்றை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.