இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

வளைகுடாவில் 6 எண்ணெய் கப்பல்கள் மீது
குண்டு தாக்குதல்!
போர் வெடிக்கும் அபாயம்!

ஓமான் வளைகுடாவில் பயணித்த பாரிய எண்ணெய்தாங்கிக் கப்பல்கள் மீது இன்று காலை கடற்கண்ணி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி சவூதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய்த் தாங்கிக்கப்பல்கள் உட்பட 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் வளைகுடாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பின்புலத்தில் இந்தத் தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுவதால் இந்த புதிய சம்பவத்தின் மூலம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புதிய கொதிநிலை ஏற்படக்கூடுமென அச்சநிலை உருவாகியுள்ளது.

இன்று தாக்குதல் நடத்தப்பட்ட எண்ணெய்தாங்கி கப்பல்களில் ஒன்றான கொகுகா குறாஜியஸில் இருந்து அதன் சிப்பந்திகள் 21 பேரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதல்களில் சிக்கிய ஒரு கப்பலில் பெரும் தீப்பிடித்ததை ஆதாரப்படுத்தும் நிழற்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து உலக எண்ணைச்சந்தையில் மசகு எண்ணையின் விலை 4 வீதம் சடுதியாக உயர்ந்துள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியை சீர்குலைக்கும் வகையில் இந்தத்தாக்குதல்கள் நடத்தப்படுவதான ஐயங்கள் நிலவுகின்றன.

கடந்த மாதம் 12 ஆம் திகதி ஞாயிறன்று சவூதி அரேபியாவின் இரண்டு பாரியஎண்ணெய்த்தாங்கிக்கப்பல்கள் ஈரானிய பின்புலத்தில் நடந்ததாக சந்தேகிப்படும் இரண்டு தாக்குதல்களில் சேதமடைந்திருந்தன.

அதன்பின்னர் சவூதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி ஆயுதாரிகள் குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தியதாலும் விநியோகம் சீர்குலைந்துள்ளது.

ரியாத் நகரில் இருந்து மேற்கில் உள்ள யான்பு நகருக்கு செல்லும் சுமார் 1200 கிலோமீற்றர் நீளமுள்ள குழாய்களே இந்த தாக்குதலில் குறிவைக்கபட்டுள்ளன.

ஈரானிய எண்ணெய் வினியோகத்துக்கு அமெரிக்கா தடைவிதித்தால் ஹோர்மூஸ் ஜலசந்தி நீர்த்தடத்தை மூடிவிடப்போவதாக ஏற்கனவே ஈரான் எச்சரித்த நிலையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.

தற்போதைய நிலவரங்கள் மேலும் தீவிரமானால் உலக எண்ணெய் சந்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.