மாடித்தோட்டம் எப்படி அமைப்பது?

மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத்தான். இதற்கெனத் தனியாக ஒர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச்சுவர்கள் மற்றும் தொங்குத் தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடங்களும், வழிகளும் உள்ளன.

மொட்டைமாடியில் செடிகள் வைப்பதால், தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். தரையில் பாலித்தீன் விரிப்பினை விரித்து அதன்மீது வைக்கலாம். இதுதவிர, பி.வி.சி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல தீர்வுகள் இருக்கின்றன. முதலில் நாம் தேர்வு செய்ய வேண்டியது வெயில் படும்படியான இடம். அதிக வெயில் படும்படியான இடங்களில் நிழல்வலைக்குடில் அமைப்பது சிறந்தது. நிழல் வலைக்குடில் அமைப்பதற்குப் பல எளிய வழிமுறைகளும் இருக்கின்றன.
பொதுவாகத் தொட்டிகள் அமைக்கும்போது எல்லாத் தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிகநேரம் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும் பிரித்து அமைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருள்களில் செடிகளை வளர்க்கலாம். இந்தத் தொட்டிகளில் செம்மண், தென்னைநார்க் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும். தென்னைநார்க் கழிவானது மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்க வைத்து செடிகளைக் காக்கும். இதை அளவுக்கதிகமாகப் போட்டால், செடிகளில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு, வேர்களும் செடிகளும் பாதிப்படையும். செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும்.
வேப்பம் பிண்ணாக்கு பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும். மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக் கூடாது. 7 முதல் 10 நாள்களில் நாம் தயார் செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அதன்பிறகே அதில் எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும். இதன்படி விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.
🔴 எப்படி விதைப்பது?
விதைகளைத் தேர்வு செய்யும்போதும் நடவு செய்யும்போதும் கவனம் தேவை. பை மற்றும் தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படியான நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும். தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்களிலிருந்து எடுக்கலாம், கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதையானது நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு.
விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவுசெய்தால் போதுமானது. அதன்பின்னர், மண்ணால் மூடிவிடவேண்டும். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்றுவிட்டு நடவு செய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்புச் செய்ய வேண்டும்.
விதை விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது, அதேபோல வழிந்தோடும் வகையில் தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரைத் தெளிக்க உதவும் பூவாளிப் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. காய்கறி விதைகளைப் பயன்படுத்தி செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது. இதுவே கீரையாக இருந்தால் பாத்தி அமைப்பது போன்று நடலாம். மேலும் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எல்லா வகைப் பொருள்களிலும் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதற்காகப் பைகளில் அடியுரம் கலந்த மண்ணை நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
🔴 எப்போது விதைக்க வேண்டும்?
மாடித்தோட்டத்தில் காலநிலையைக் கவனிக்க வேண்டும். அதாவது ஜூன், ஜூலை மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்கச் சரியான மாதம். கோடைக்காலத்தில் வீட்டுத்தோட்டம் போட திட்டமிடலாம். எக்காரணம் கொண்டும் விதைகள் நடவு செய்யக் கூடாது. அதன் பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடலாம். சிலர் குளிர்காலக் காய்கறிகளான பீட்ரூட், முட்டைக்கோஸ், அன்னாசி, கேரட் ஆகியவற்றை அக்டோபர் மாதங்களில் நடவு செய்கிறார்கள்.
🔴 எப்படிப் பராமரிப்பது?
மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்புதான். ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி நிரம்பி வழியும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது. மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிர் உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது.
மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க வேப்பெண்ணெய்க் கரைசலை நீரில் கலந்துவிடலாம். தற்போது பெரும்பாலான மக்கள் மாடித்தோட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனமும் அமைத்து வருகின்றனர்.
வாரம் ஒருமுறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்திவிட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பு பஞ்சகவ்யா தெளிக்கலாம். காய்கள் பறிக்கும்போது முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிட வேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்றவிடலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.