எடப்பாடி பழனிசாமியைக் கடுகடுக்க வைத்த ரோகிணி!📷

கடந்த ஆகஸ்ட் 2017-ம் ஆண்டு சேலத்தின் முதல் பெண் கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே பதவியேற்றார். முதல்வர் மாவட்டத்தின் இளம் ஆட்சியராக வளம் வந்த இவர் கொஞ்ச நாள்களிலேயே தமிழகம் முழுவதும் வெகு பிரபலமடைந்தார். இவர் திடீரென நேற்று (27.6.2019) சேலம் மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு இசை பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு மாறுதல் என்பது தவிர்க்க முடியாது. ஆனால், முதல்வர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ஓர் ஆட்சியர் டம்மியான இன்னொரு பதவிக்கு மாற்றப்படும்போது மாறுதலுக்கான பல சந்தேகங்கள் எழுகின்றன. `சேலம் கலெக்டர் ரோகிணி காரணம் இல்லாமல் மாற்றப்படவில்லை. காரணத்தோடுதான் மாற்றப்பட்டிருக்கிறார்' என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவரம் தெரிந்த அதிகாரிகள்.

அதோடு காரணங்கள் சிலவற்றையும் அவர்கள் பட்டியலிட்டனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்துள்ள அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பதே அவரது பணிமாறுதலுக்கான பொதுவான காரணம் என்கிறார்கள்.

அதோடு சில சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ``நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலம் கோட்டை மைதானத்துக்கு வந்தபோது கோட்டை மைதானத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ள திருவாகவுண்டனூர் வரை அ.தி.மு.க கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டிருந்தன. அதையடுத்து தி.மு.க-வினர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணியிடம் புகார் தெரிவித்தார்கள். உடனே கலெக்டர் ரோகிணி அந்தக் கொடிக் கம்பங்களை அகற்றச் சொல்லி உத்தரவிட்டார். இது முதல்வர் தரப்பைக் கோபப்படுத்தியது.


சமீபத்தில் சேலம் 5 ரோடு பகுதியில் பறக்கும் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பாலத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்தச் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பார்த்திபனும், சேலம் தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளரும் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க-வினர் கலந்துகொண்டார்கள். முதல்வர் மேடையில் இருக்கும்போதே அ.தி.மு.க-வினருக்கும் தி.மு.க-வினருக்கும் ரகளை ஏற்பட்டது. இதில் முதல்வர் ரொம்ப அப்செட் ஆகிவிட்டாராம். `மக்களவை உறுப்பினராகப் பதவிப் பிரமாணமே எடுக்காதபோது, யாரைக் கேட்டு பார்த்திபனுக்கு அழைப்பு கொடுத்தீர்கள்' என்று கடுப்பானதோடு கலெக்டர் ரோகிணி மீது முதல்வர் அதிருப்தியானார்.

சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பார்த்திபன் வெற்றிபெற்ற பிறகு, பல முறை கலெக்டரை நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைக்காக மனுக்கொடுத்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரை கலெக்டர் உடனே நேரில் சந்திப்பதையும் அ.தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. அதை முதல்வர் காதுக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.



ரோகிணி சேலம் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள 10 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளையும் தட்டிக் கழித்து வந்ததையும், தொடர்ந்து முதல்வர் கவனத்துக்கு தெரியப்படுத்தி வந்தார்கள் அம்மாவட்ட அ.தி.மு.க-வினர்.

இப்படிப் பல காரணங்கள் சொன்னாலும் உண்மையில் சேலத்தில் தற்போது தி.மு.க-வினரின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. அதனால் முதல்வருக்கு நேரடி ஆதரவாளராகச் செயல்படும் ஆட்சியர் இருந்தால் மட்டுமே இங்கு அரசியல் செய்ய முடியும். தி.மு.க மாநிலப் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தித் தேர்தலையே நிறுத்திய வேலூர் கலெக்டர் ராமன் இங்கு இருந்தால் சரியாக இருக்கும் எனக் கருதியே ராமனுக்கு, முதல்வர் தேர்தல் பரிசாக சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கி இருக்கலாம்'' என்கிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.