ஆதரவற்ற மக்களின் வளர்ச்சிக்கு வருண் அறக்கட்டளை தொடக்கம்!

ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக ‘வருண் அறக்கட்டளை’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர்ஸ், வருண் அறக்கட்டளையை ஜூன் 26ஆம் தேதி தொடங்கியுள்ளது.

ரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் பெயரில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு இந்த அறக்கட்டளை ஆதரவளித்து, அவர்களுக்கான எதிர்கால வளர்ச்சிக்கு உதவுகிறது. இச்சமூகத்தினரின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முனைப்பில் வருண் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

 இந்த அறக்கட்டளையானது வாடுகின்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் சமூகத்தினரின் நிலையான சிறந்த மாற்றத்துக்கும் வழிவகுக்கும். இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளே சிறப்பான, செழிப்பான மற்றும் ஒத்துழைப்பு தரும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் சவால்களுக்குத் தீர்வு காண்பதாகும். இச்சமூகத்தின் தேவை, சவால்கள் ஆகியவை குறித்து விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்ட பின்னர், பட்டினப்பாக்கம் சமூகத்தை வருண் அறக்கட்டளை தேர்ந்தெடுத்துள்ளது. இங்கு வேலைவாய்ப்புத் திறன்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு ஆகிய சவால்கள் முதன்மையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.


இந்த அறக்கட்டளையின் முதல் படியாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்த விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளது வருண் அறக்கட்டளை. இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடி, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டினப்பாக்கத்தின் பல்வேறு குப்பங்களைச் சேர்ந்த அணிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.


 மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா புரத்தை மேம்படுத்துவதிலும் வருண் அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது. அங்கு நிறைவுபெறாமல் இருக்கும் கோயில் கட்டுமானத்தை நிறைவுசெய்வது, 15 ஆண்டுகள் பழைமையான சென்னை கார்ப்பரேஷன் உடற்பயிற்சி மையத்தை மேம்படுத்துவது மற்றும் ரூ.5 லட்சம் செலவில் அதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகளை வருண் அறக்கட்டளை மேற்கொள்கிறது. இந்த உடற்பயிற்சி மையத்துக்கு அருகிலேயே சிறுவர்கள் பயன்பெறும் வகையில் கைப்பந்து மைதானமும் அமைக்கப்படுகிறது.

ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான கரும்பலகைகள், மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் இதர உபகரணங்கள் அறக்கட்டளை சார்பாக ரூ.2 லட்சம் செலவில் வாங்கித் தரப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தொடக்க விழாவில் பேசிய நிர்வாக இயக்குநர் வருண் மணியன், “இந்த அமைப்பின் நோக்கமே வாடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்குவதே ஆகும். அவர்களின் மேம்பாட்டுக்கு விளையாட்டுப் போட்டி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.


இச்சமூகத்தின் முன்னேற்றத்துக்கான முதன்மைப் படிகளில் விளையாட்டை ஒரு படியாக எடுத்துள்ளோம். சமூக வளர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நாங்கள் பெரிய திட்டத்தை வகுத்துள்ளோம்” என்றார். வருண் அறக்கட்டளையின் வாயிலாகப் பயன்பெற விரும்புபவர்கள் 044 43470970 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.