கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!
இந்துக்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய கமல் ஹாசனுக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று கூறுகிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்கியது தீவிரவாதம். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அவரை கொலைக்கு நியாயம் கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமமான, சமரசமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது நல்ல இந்தியனின் விருப்பம். நான் நல்ல இந்தியன், அதை மார்தட்டிச் சொல்வேன்' என்றார்.இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரக்குறிச்சியில் கமல் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன.
இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறிய கமலுக்கு பாஜகவினரும் அதன் ஆதரவாளர்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். கமலின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, தமிழ்நாட்டில் நடந்த விவாகரத்திற்குச் சென்னையில் வழக்கு தொடராமல் இங்கு ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் கமல் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கமல் ஆளும் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவே முன்ஜாமீன் வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்திரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை கொடுத்து முன்ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதன்படி இன்று கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான கமல்ஹாசனுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை