தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: உதயநிதி!!

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளராக நடிகரும் முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றவர், கலைஞர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு தன்னுடைய செயல்பாடுகள் மூலமாக பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 5) மாலை இளைஞரணி அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதிக்கு, இளைஞரணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இன்று நடைபெற இருக்கும் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த உதயநிதி, “தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து இளைஞரணி அமைப்பாளர்களுடனும் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறேன். முதல் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதிக ஆர்வமாக உள்ளேன். கண்டிப்பாக அடுத்தகட்ட வேலைகள் விரைவில் தொடங்கும். தினமும் அலுவலகம் வருவதையெல்லாம் செய்தியாக்காதீர்கள். இது என்னுடைய வேலை” என்றார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, “விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அது எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.