தண்டனையை ரத்து செய்ய வைகோ மேல்முறையீடு!

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.


2009 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு வைகோ மீது தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. நீண்ட காலமாக நடந்துவந்த இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 5ஆம் தேதி எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. வைகோவுக்கு ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் வைகோ மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 13) வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தனது மனுவில், “எனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி தீர்ப்பினை வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டில் முழுமையான ஆதாரம், சாட்சியங்கள் இல்லாத நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை அடுத்த வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தண்டனை மாநிலங்களவைத் தேர்தலில் வைகோ போட்டியிடுவதில் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்ற நிலையில் அவர் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 11ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தலில் வைகோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்து அவரிடம் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வரும் 24ஆம் தேதி மாநிலங்களவையில் அவர் பதவியேற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.