அமேசன் காடுகளுக்காக உலகமே அழுகிறது.!!

ஆனால் உலக பயங்கரவாத அரசுகளும் அதை தாங்கும் பெரு முதலாளிகள்/ நிறுவனங்கள்/ அமைப்புக்கள் வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கின் பக்க விளைவு இது என்ற புரிதல் பலருக்கு இல்லை.



அதுதான் இந்த உலக ஒழுங்கை
நிர்மூலம் செய்ய 'நந்திக்கடல்' அறைகூவல் விடுக்கிறது.

இதனூடாக உலகில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலை மட்டுமல்ல, இந்தப் பூமி பந்தே பசுமையானதாக மாறும் என்பதே அதன் கோட்பாட்டு உள்ளடக்கம்.

'நந்திக்கடல்' ஒரு விடுதலைக் கோட்பாடு என்ற முழுமையை/ அர்த்தத்தை இதனூடாகத்தான் அடைகிறது.

“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே..

அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும்/ சுற்றுசூழலுக்கும்தான் என்பதற்கு இது ஒரு வரலாற்று ஆதாரம்.

புலிகள்  பாரிய இன அழிப்புடன் மேற்குலக/ பிராந்திய கூட்டணிகளினால்  அழிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உள.

இதுவரை படைத்துறை/ புவிசார் அரசியல் காரணங்கள் மட்டுமே  மேலோட்டமாக அதுவும் இன்றைய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளை எதிர் நிலையில் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கி வெளிவந்த ஆய்வுகளே அனேகம்.

ஆனால் உண்மையான காரணங்கள் இன்னும் ஆராயப்படவில்லை..

அதில் முதன்மையானது தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானம்/ நிர்வாக அடுக்கு/ தொலை நோக்குப் பார்வை.

போரை நடத்திக் கொண்டே சமகாலத்தில் புலிகள் உருவாக்கியிருந்த இதன் பரிமாணத்தை சமாதான காலத்தில் பார்த்து அதிர்ந்து போன மேற்குலக அச்சமும் புலிகளின் அழிவுக்கு வலுச்சேர்த்த முக்கிய காரணி.

ஒரு புதிய நாடு உருவாவது புதிதல்ல, ஆனால் மேற்குலகின் ஒத்துழைப்பின்றி / அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தேசக் கட்டுமானத்தில் புதிய நிர்வாகச் சிந்தனைகளோடு புவியியல்/ வரலாற்று அடிப்படையில் புதிய பரிமாணங்களுடன் தமிழீழம் உருவாவதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அதில் குறிப்பானது இயற்கை / காடுகள்/ சுற்றுச்சூழல்/ வன உயிர்கள் குறித்த புலிகளின் அக்கறையும் அதன் விளைவான கட்டுமானங்களும்.

மேலே படத்திலுள்ள 'தமிழீழ சூழலியல் நல்லாட்சி ஆணையம்" /"தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்"  உருவாக்கப்பட்டதும் அவை உலகளவில்  பல ஆய்வுப் பட்டறைகளை நடத்தியதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

சமகாலத்தில் வாழ்வதால் புலிகளின் போராட்டத்தையும் அது உலகளாவிய அளவில் உருவாக்கிய பரிமாண மாற்றங்களையும் நம்மால் உணர முடியவில்லை.

ஆனால் மனித குல  வரலாற்றில் இது ஒரு பெரும் பிரளயமாகப் பதிவாகும்.

எனவே நாம் நம்மை சுற்றியுள்ள சூழலை முதலில் புரிந்து கொள்வோம்.

அதற்கு எதிராகப் போராடுவோம்.

நாம் நந்திக்கடல் கோட்பாடு வழியே போராடி விடுதலை அடையும்  போது நாம் மட்டும் விடுவிக்கப்படப் போவதில்லை - உலகின் ஒவ்வொரு போராடும் இனங்களும்தான்..

கூடவே தற்போதைய உலக ஒழங்கை நிர்மூலமாக்கி / புதிய உலக ஒழுங்கினூடாக பூமியை பசுமையாக்குவோம்.

நந்திக்கடலின் செய்தி அதுதான்.

நாம் அதைப் புரிந்து போராடதவரை அது வெறும் நீர்ப்பரப்புத்தான்..

அதுவரை அமேசன்கள் எரிந்து கொண்டேயிருக்கும்/ தமிழகத்தில் அணு உலை உருவாகிக் கொண்டேயிருக்கும்/ அலெப்போவில் இரசாயன குண்டுகள் வெடித்துக் கொண்டேயிருக்கும்.

விளைவாக, நாம் வாழும் பூமிப் பந்து நாசமாகிக் கொண்டேயிருக்கும்..
- பரணி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.