தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல்நிலைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் லெ ப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் நீங்காத நினைவுகள்.!

அவன் நிறையவே சாதிக்கவேண்டியவன்……

லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் (மேல்நிலைப் புலனாய்வுப் பொறுப்பாளர்)


யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினுள் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும்தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்குமல்லவா? இல்லையே?

விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடம் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன்.

1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து மீண்டும் தமிழர்படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம்.

மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக செயற்பாட்டளர்களாக ஆட்கள் தேவைப்பட ‘கட்டைக்’ குணத்தாரை அணுகி, “குணம் அண்ணா உங்கட ஊர்ப் பக்கம் புலனாய்வு வேலைகள் செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்த ஆட்கள் தேவை. இருந்தால் ஒழுங்குபடுத்தித் தாருங்கோ” என பொறுப்பாளர் கூற குணத்தாரின் மூளையில் பொறியாய்த் தட்டுப்பட்டவனே பிரபாகரன் எனும் இயற் பெயரைக் கொண்ட கரன். குணத்தின் ஈருருளி பாவரசு, வடலி, மதில் ஒழுங்கைகளினுடாக விரைந்தோடி பண்டத்தரிப்பைக் கண்டு வடலி அடைப்பை அடிய அப்பொழுதுதான் கொழும்பிலிருக்கும் தந்தையிடம் சென்று வந்த களைப்பில் அவன் நின்றான்.

“கரன், புலனாய்வு வேலைகளுக்கு ஆட்கள் தேவையாம். பகுதி நேரமாக வேலை செய்ய உன்னால் முடியுமா?” சுற்றி வளைத்து கதைக்கத்தெரியாத குணத்தார் நேராய்க்கேட்டார். சில நிமிட அமைதியின் பின் “அண்ணை என் தம்பி எனக்கு முன் தன்னை விடுதலைப் பாதையில் இணைத்துக் கொண்டது என் மனச்சாட்சியை நித்தமும் குடையுது. பகுதி நேரமாக விடுதலைக்காக உழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை, முழுமையாக என்னை இணைத்துக் கொள்வதைப் பற்றியே சிந்திக்கிறேன்” அவனது சோடனையற்ற தெளிவான பதிலை குணத்தார் எதிர்பார்க்கவில்லை. மூன்று சகோதரர்களில் ஒருவன் ஏற்கனவே நீலவண்ணன் ஆக தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்தில் இணைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் தாயாருக்கு ஆதரவின்றி, தமக்கைக்கு உதவியின்றி இவனை முழுநேரம் போராளியாகச் செயற்படும்படி கேட்க குணத்தாரின் கனிவு துணிவைக் கொடுக்கவில்லை.

போரின் வடுக்களை அதிகம் சுமக்காத பண்டத்தரிப்பு சிற்றூரில் சிவபாக்கியநாதன் இராசமணி குடும்பமும் போரின் வடுக்களை அதிகம் சுமக்காத விடுதலைப்போருடன் அதிக ஈடுபாடு கொண்டிராத குடும்பம். இருந்தும் குணத்தார் கதைத்து சிறிது காலத்தின் பின் 13.09.1991 புலிகள் அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்து விடுதலைப் பாதையில் பயணிக்க முதல் அடியை எடுத்துவைத்தான் செந்தமிழ்ச்செல்வன்.

செந்தமிழ்ச்செல்வன் பெயரிலிருக்கும் அழகு, அறிவு, அமைதி, விருப்பு, ஈர்ப்பு, செழிப்பு எல்லாமே அவனிலிருந்தன.

சிங்கத்தின் தோற்றத்தைப் பார்த்தே அதன் குணத்தை அறிந்துவிடலாம். இவன் அப்படிப்பட்டவனல்ல. யானையைப்போல் அமைதி, அழகு, ஆழம், பக்குவம், வீரம் எல்லாமே. அதனால் அவனைப் புரிந்துகொள்ள அளவெடுக்க சிலருக்கு சிரமமாயிருந்தது.

டேவிட் 01 பயிற்சிமுகாம் வாழ்வே விளையும் பயிரை அடையாளப்படுத்தியது.பல்வேறு சாயல் உள்ள, உபயோகமுள்ள பல்வகைப் பொருட்களை வைத்து சில மணித்துளிகளில் மனதில் பதித்து வெள்ளைத் தாளில் எழுதுமாறு கூறி பயிற்சிப் போராளிகளின் நினைவாற்றலை பயிற்சி ஆசிரியர் அமீன் பரிசீலிப்பார். எல்லோரும் எழுதத்தொடங்க “பேனாக்களை கீழே வையுங்கோ ஓடுங்கோ” என கட்டளை பிறக்கும். பிறகென்ன எல்லோரும் ஓடத்தொடங்க மனதில் உள்ளவை அனைத்தும் மறந்துவிடும். இவன் மட்டும் ஒவ்வொரு தரம் விழுந்து எழும்பும்போதும் ஒவ்வொரு பொருளாய் உச்சரிப்பான். “வெற்றி பெற வேணும் எள்ளது செய்துகாட்டவேணும்” என்ற அவனது முயற்சி அதிக புள்ளிகளை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கும். அப்பயிற்சி முகாமிலிருந்து சிறப்புப் பணிக்கென தேர்வுசெய்த பதினைந்து போராளிகளினுள் இவனும் ஒருவன்.

யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தரம்வரை கற்ற அறிவும் இயல்பான புலனாய்வுச் சிந்தனையும் ஒல்லியான பளிச்சென்ற வெள்ளை உருவமும், அலட்டல் அற்ற அமைதித் தன்மையும், யாருக்குத்தான் பிடிக்காது. அவை புலனாய்வுப் பணிக்கான சாதகமான கூறுகள். ஆரம்ப புலனாய்வுப் பணிக்கான களங்களாக இவனுக்கு நல்லூர், பாசையூர், குருநகர் பிரதேசங்கள் அமைந்திருந்தன.

1994 விடுதலைப்போர் வீரியமும், வீச்சும் பெற்றிருந்த காலம். விடுதலை வீச்சை, மூச்சை, அதன் வேரையே தன் வீட்டு நலனுக்காக, எஜமானிய இருப்புக்காக அரித்துவிடத் துணிந்த அயல் “வீட்டுக் கறையான்” களின் கரங்களை முறியடிக்க, முறித்தெறிய ஒழுங்கமைக்கப்பட்ட புலனாய்வுப் பணியில் ‘மனிதனுக்கு இதயம்’ போன்ற அலுவலகப்பணி இவனுடையது. புலனாய்வுப் பணியில் சிறு தகவல்கூட பெரும் முடிச்சை அவிட்டுவிடும். போலித்தகவல்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே முடிச்சுக்களைப்போட்டு ஆபத்துக்களையும் உண்டுபண்ணிவிடும். பாலையும் தண்ணீரையும் அன்னத்தால் வேறுபடுத்த முடியுமோ இல்லையோ புலனாய்வாளன் உண்மையையும் பொய்மையையும் வேறுபடுத்தித்தான் ஆகவேண்டும்.

புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையில், “சிறந்த புலனாய்வாளனின் வரலாறு என்பது, அவன் சேகரித்து, ஆய்ந்து எழுதிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள், விடுதலைப்போரின் வளர்ச்சிக்கு, தமிழீழ கட்டுமானத்திற்கு எத்துணை துணை புரிகிறதோ, அதுவே அவனது வரலாறாகின்றது” என்ற அவரின் பார்வையில் தன் அலுவலகப் பணிகளை, தூரநோக்குடன் காலம் கடந்தும் பயன்தரக்கூடியதாய் உண்மை பொய் அறிந்து, தகவல்களை கோவையாக்கி, தன் முக்கியத்துவம் விளக்கி, தன் பணி முக்கியத்துவம் விளக்கி புலர்வே இல்லாப் பொழுதுகளில் பணியாற்றியதை இவன் பொறுப்பாளர் இன்றும் சிந்தித்து நினைவு கூறுகின்றார். (இரகசியம் என்பதால் விரிந்துரைக்க முடியவில்லை)

நிர்வாகச் செயற்பாட்டின் பெறுபேறுகளை கோவையாக்குதல், தகவல்களைப் படிவங்களில் பூர்த்திசெய்தல், தேவையான வற்றினைப் பெறல்…. என நீளும் அலுவலகப் பணிகளை, தூரநோக்குடன் காலங் கடந்தும் பயந்தரக்கூடியதாய், புதிதாய்வரும் பொறுப்பாளன், போராளி பயன்படுத்தக் கூடியதாய் உண்மை, பொய்மை அறிந்து கோவையாக்கி, தன் பணிமுக்கியத்துவம் விளங்கி புலர்வே இல்லாப் பொழுதுகளில் பணியாற்றியதை இவன் பொறுப்பாளர் இன்றும் சிந்தித்து நினைவு கூறுகிறார்.

வழங்கப்பட்ட பணி முடியவில்லையெனில் முகாமிலிருந்து ஐந்நூறு மீற்றர் முன்னுக்கே உந்துருளியின் இயக்கத்தை நிறுத்தி ஓசையின்றி அதனை உருட்டி முகாம்வந்து தன் பணி முடித்து மீண்டும் அதனை உருட்டி ஐந்நூறு மீற்றருக்கு அப்பால் இயக்கி தன் பணிக்காக விரையும் இவன் செயல் பொருப்பாளருக்குக் கொடுக்கும் மதிப்பையே முன் நிறுத்தும்.

“தம்பிமாரே, சண்டைக்குபோக விருப்பமான ஆட்கள் கையை உயர்த்துங்கோ” புலனாய்வுப் பணியில் சலிப்பு வந்துவிட்டதா? என பார்ப்பதற்கான பொறுப்பாளரின் உத்தி இது. தயங்கித் தயங்கி ஆளையாள் பார்த்து கைகள் உயரும். ‘ஒரு நாள்’ உயர்ந்த கைகளினுள் இவனது கையும் ஒன்றாய் இருந்தது. பிறகென்ன, வழமைபோல கடற்கரை வேட்டையில் தகதகக்கும் சுடு மணலில் உருட்டி உருட்டி சண்டைக்கான பயிற்சிகள் நடைபெறும். ஆனால் இறுதியில் சண்டைக்கான வாய்ப்பு மட்டும் கிடைக்காது போகும்.

10.03.1995 மீண்டும் ஒரு தரம் யாழ்மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சிங்களப் படை நடவடிக்கையான இடி முழக்கம் சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைப் பார்பதற்காக இவன் சென்றபோது தான் தற்செயலாக தனது தம்பி லெப்.நீலவண்ணன் யாழ் மண்ணை தக்கவைக்கும் சமரில் வீரச்சாவைத் தழுவியிருந்தமையைக் கண்டான். சக போராளி என்பதற்கப்பால் இடுப்பில் சுமந்து திரிந்த கடைசித் தம்பியுமல்லவா? இறுதியில் அவனைத் தோளில் சுமந்து செல்லக்கூட அன்றைய போர்ச்சுழல் இவனுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை.

1996, 1997 புலிகளே இல்லாத யாழ்ப்பாணத்தை சிங்களத் தலைமை கனவுகண்டு ஆக்கிடமித்திருந்த காலம். ஒடுங்கிய குடாப்பரப்பைச் சூழ படைவேலி அமைத்து முழத்துக்கு ஒரு சிங்களப் படைவீரனை காவலுக்கு விட்டிருந்த நேரம். யாழ்மண் குடாவாக விரிந்து ஒடுங்க்கியமை பாதுகாப்பு ரீதியில் சிங்களப்படைக்கு அதிகம் சாதகமாயிற்று.

தலைவர் அவர்கள் குறிப்பிடுவதுபோல் எந்தப் பலத்திலும் பலவீனம் இருந்திடாமலா போய்விடும். “பலவீனம் இல்லாவிட்டாலும் பலம் உடைத்து உட்புகுவோம்” என்ற விடுதலை வீரர்களின் வீச்சை சிங்களத் தலைமையின் ‘ஆக்கிரமிப்பு மனோபாவம்’ உணரவிடவில்லை.

துப்பாக்கியுடன் கெரில்லா வீரனாக யாழ் மண்ணில் நடவடிக்கையில் ஈடுபடுவது அதிக ஆபத்தை உருவாக்கி இருந்த காலத்தில் மக்களுடன் மக்களாக, அவர்களின் புதல்வர்களாக, புலனாய்வாளர்களாக தேவை ஏற்படும்போது மட்டும் கைத்துப்பாக்கியுடன் தாக்குதலாளர்களாக தயார்படுத்தப்பட்ட புலனாய்வு அணியில் இவன் முதன்மையானவன். பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் ஒவ்வொரு வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் புலனாய்வு செய்வதற்காக ஆக்கிரமிப்பாளனின் பிடரியில் அடிப்பதற்காக புலனாய்வு, படையியற் பயிற்சிக்காக முல்லைத்தீவுக்குச் சென்றான்.

என்ன பயிற்சி? கரும்புலி வீரனுக்குரிய பயிற்சி. எதிரியை அடித்து விழுத்தி துப்பாக்கியை பறித்தெடுக்கும் பயிற்சி, உணவு உறக்கத்தை மறந்து சகிப்புடன் மறைந்திருக்கும் பயிற்சி என நீண்டுகொண்டே சென்ற பயிற்சியில் ஒருநாள் ஓய்வுப் பொழுதில்…..

இவனுடன் அன்பு வாத்தி உந்துருளியில் புதுக்குடியிருப்புக்கு வந்துகொண்டிருக்க பெற்றோல் தீரும் நிலை, பல ஒழுங்கைகள் சுற்றி ஒரு வீட்டின் வாசலில் உந்துருளியை நிறுத்தியவன், “மாஸ்ரர் ஆதரவாளர் ஒருவரைச் சந்திக்கவேணும் குறை நினைக்காமல் வாசலில் நில்லுங்கோ” போனவன் விரைவாகவே திரும்பினான். “பெற்றோல் தீரப்போகுது ஒழுங்கைகள் எல்லாம் விட்டுக் கொண்டோடுகிறீர்கள்…..” உந்துருளியில் பின்னால் இருந்து அன்பு வத்தி கேட்க “பெற்றோல் அடிச்சாச்சு மாஸ்ரர், உங்களை கூட்டிப்போனால் சனம் உங்கட முகத்தைக் காண, பிறகு என்னைச் சாட்டி நீங்கள் பெற்றோல் அடிக்க….”, “வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு” அன்பு வாத்திக்கு உறைத்தது.

கூப்பிடு தூரத்திலிருந்தும் யாழ் மண்ணுக்குப் பயணிப்பதாயின் ஏதாவது ஒரு கடல் வழியையே பயன்படுத்தவேண்டும். ஆழமான கடற்பகுதி அதற்கு வாய்ப்பளிப்பதில்லை. ஆதலால் உப்பு ஏரிகளே தெரிவு செய்யப்படும். ‘குல்லா’ என அழைக்கப்படும் சிறு ஓடங்களின் ஆதரவுடன் தற் துணிவை துடுப்பாக்கி பயணம் தொடரும். வயிறு விழுங்கி ஆறு {நீரோட்டம்} சில வேளை வீச்சாய் ஓடும். அல்லது சாதுவாய் ஓடும். வீசும் கடுங்காற்றைக் கடந்து இருட்டைக் கிழித்து ஓடம் நகரும்.

அன்று அப்படியான பயணம்தான். “அண்ணை, இடுப்பளவு தண்ணீர் வந்திட்டா எங்களை இறக்கிவிடுங்கோ. நாங்கள் தரைஎரும்வரை எங்களுக்காக காத்திருங்கோ, சிலவேளை ஆமி சுடத்தொடங்க்கினால் நாங்கள் எப்படியும் தப்பிவரப் பார்ப்பம். அப்படி வெடிச்சத்தம் ஏதும் கேட்காட்டால் கரையில் நிக்கிற பெடியளிட்டை நாங்கள் சுகமாய் போய்ச் சேர்ந்ததாய் சொல்லுங்கோ” பொறுப்பாய் செல்லும் இவன்தான் அப்படிக் கூறுவான். செய்திக்காக ஒட்டி காத்திருக்க அவர்களின் பயணம் தொடரும். சிங்களப் படைகளின் அதிவெளிச்ச மின்குமிழ்கள் (FOCUS LIGHT) ஏரிப்பரப்பில் ஒளியைப் பாய்ச்சும். கண்கள் மட்டுமே வெளியே தெரிய நீருக்குள் மறைந்து கொள்வார்கள். இருள்கவிய மீண்டும் பயணம் தொடரும். கரையை அண்மிக்க கூரிய கத்திபோல நீண்டிருக்கும் ‘கவாட்டி’ ஊறிய பாதங்களை பதம் பார்க்க ஊறிவிறைத்து உறைந்துபோன பாதங்களுக்கு வெட்டுவதும் தெரியா குத்துவதும் தெரியா, ஆனால் குருதி கொப்பளிக்கும். அமைதியாக நகர்ந்து கரையேற ஏதோ ஒரு அகமாத்தம் படையினரை விழிப்படையவைக்க அவர்கள் துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்கியது. காதலி கூர்மைப் படுத்திக் காத்திருக்கும் ஓட்டிக்கு விடயம் விளங்க சத்தம் வரும் திசையை நோக்கி ஓடத்தைச் செலுத்த, போனவர்கள் மீண்டு வந்தார்கள். தொடக்கப் புள்ளிக்கு வந்துசேர, உப்பூரிய ரொட்டிகள் ஒருநாளுமே சுவைத்திடாத சுவையைத்தர அதைச் சாப்பிட விடாமல் நுளம்புகள் மோசம் செய்தன. அவற்றை விரட்டுவதற்கு இருந்த ஒரே வழி அவர்களது பழைய செருப்புகள். செருப்புகள் நெருப்பில் எரியத்தொடங்க கடைசியாக எரிந்து கொண்டிருந்தது இவனது ஒற்றைச் செருப்பு. சூரியன் பகலைத்தர ஒற்றைச் செருப்பு மட்டுமே எஞ்சியது. இன்னொரு இரவில் இவர்கள் தங்கள் பயணத்தில் வெற்றிகண்டனர்.

லெப்.கேணல் சிவனேசனுடன் வலிகாமம் சென்றவன், தாம் இரவு தங்கவேண்டிய கோண்டாவில் ஆதரவாளரின் வீட்டினை பல மணிநேரம் தேடியும். கண்டுகொள்ள முடியவில்லை. நாய்கள் குறைக்கத் தொடங்கியிருந்தன. “இரவில் நடமாடுவது ஆபத்தானது” என உணர்ந்த இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாத இருவேறு வீடுகளில் கதவினைத் தட்ட, அந்த இரவில் ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் யார்தான் கதவினைத் திறப்பர்? பிறகென்ன வாசல் படிகளில் அரைகுறை உறக்கத்தில் நம்பிக்கையுடன்…. காலையில் வீட்டாருக்கு அதிர்ச்சி, அவர்கள் தங்களை அறிமுகப்படுத்த வீட்டாரின் மனப்பீதி இன்னும் அதிகமானது. தாம் தேடிவந்த வீட்டினை விசாரிப்பது புலனாய்வுச் சிக்கல் ஒருவாறாய் கோண்டாவில் சந்தியில் ‘றோசாப்பூ’ என்னும் குறியீட்டுப் பெயரைக்கொண்ட ஆதரவாளனைக் கண்டபோது “கடவளே உங்களுக்கு நல்ல காலம்தான், என்ரை வீட்டை உடைச்சு ஆமி எல்லா இருக்கிறான்” என்ற அதிர்ச்சித் தகவலுடன் தன் தற்காலிக வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

மறுநாள் சிவனேசனை முன் இருக்கையில் ஏற்றி ஈருருளியை சந்தியில் திருப்ப ‘படையினர்!’, சடுதியாக ஈருருளியை திருப்பியவன் “நாங்கள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வந்தவர்கள். ஆமி அடையாள அட்டையை கேட்டாலும் அதனைக் காட்டி சாதுரியமாய் தப்பி பணியாற்ற வேண்டும்” என்ற பொறி சிந்தனையில் தட்டுப்பட ஈருருளியை தேநீர்க் கடைக்கு செலுத்தினான். உண்மையில் அவர்களது அதிஸ்ரம், அன்று எதுவுமே நடக்கவில்லை. பின்னாளில் எல்லாமே அத்துப்படியானது. படை உளவாளிகல்கூட இவனின் நண்பர்களானார்கள்.

இவனது பணியில் தாக்குதல் நடவடிக்கை என்பது இரண்டாம் பட்சமானவை. இரகசிய செயற்பாட்டாளர்கள் தங்கி வேலைசெய்ய வீடுகள், அவர்களுடைய அம்மா, அப்பா, சகோதரர்கள், அன்ரி…. என உறவுகள், படை உளவாளிகளின் கண்களினுள், அயல் வீட்டாரின் கண்களினுள் சந்தேகப் பிராணியாய் விழுந்திடாதபடி சூழலுக்கேற்ப, வயதுக்கேற்ப, தோற்றத்துகேற்ப மறைப்புத் தொழில்கள் என இவனது புலனாய்வுச் செயற்பாடுகள் துடிப்புடன் நீண்டதில், வலிகாமத்தில் சிவனேசன், எமர்சன், சிவம், சுந்தர் எனப் பல இரகசிய செயற்பாட்டுப் போராளிகளை நிலைப்படுத்த வழிவகுத்தன. செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கையில் ‘வன்னிக்கு வரவும்’ கட்டளைப் பணியகத்திலிருந்து புலனாய்வுப் பொறுப்பாளரின் தகவல் அவன் கரம் சேர்ந்தது.

“வன்னிக்குப் போகுமுன் தாக்குதல் செய்யவேண்டும். விரைவாகச் செய்யவேண்டும். நல்லதொரு இலக்காகத் தேர்வு செய்யவேண்டும்” இவனது உதடுகள் அப்படித்தான் உச்சரித்தன.

வேவு முடிந்து,தயார்ப்படுத்தல் முடிந்து தற்கொடையாளனுடனும் இலக்கை அண்மிக்க சில மணித்துளிகளில் இலக்குத் தப்பிட முதல் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இன்னுமொரு முயற்சி, மறைப்பொன்றைத்தேடி ஆபத்தைச் சந்தித்து மறைப்பைப் பெற்று அதற்குள் கண்ணிவெடியை (CLAY MOUR) வைத்துக் காத்திருக்க இலக்கு வரவேயில்லை.

படைப் பிரதேசத்தினுள் தாக்குதல் நேரத்து சாதுரியத்தை, துணிவைவிட தாக்குதல் முயற்சியின்போதே அதிக துணிவும், சாதுரியமும் தேவைப்படும். நிறைந்த ஆபத்தைச் சந்தித்தும் முயற்சிகள் வெற்றியளிக்காமை இவனது மனதை உடைத்தது உண்மைதான்.

வன்னிக்குச் செல்வதற்கான நாள் வந்தது. எண்ணத்தில் துடித்த முயற்சிகள் வெற்றிகொள்ளப்படாத கவலை ஆட்கொள்ள ‘முயற்சிகள்தான் வெற்றிக்கான படிக்கற்கள்’, என புலனாய்வுப் பொறுப்பாளர் கூறுவார். என்பதை அறியாத இவனை சிறு ஓடம் மீண்டும் வன்னிக்கரையில் சேர்ப்பித்தது. இவனது செயற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டன. கொவையாக்கப்பட்டன. நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டன. ஆத்ம பூர்வமாக நேசிக்கப்பட்ட தலைவரை சந்தித்தான். தலைவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டான். புதிய கட்டளைகள், புதிய செயற்பாடுகளுடன் இன்னும் அதிக துணிச்சலுடன், நம்பிக்கையுடன் யாழ் உள்ளக புலனாய்வு கட்டளைப் பொறுப்பாளராக மீண்டும் யாழ்மன் இவனை வரவேற்றது.

1999 முற்பகுதி, “சிங்களப் படைப்பிரிவின் புலனாய்வாளர்கையும் துணைபோகும் கைக்கூலிகளையும் அழித்தல், அவர்களது செயற்பாடுகளை, நடமாட்டத்தை முடக்குதல் என்பன, யாழ் மண்ணில் போராளிகளின் செயற்பாட்டை இலகுபடுத்த வழிசமைக்கும்” என்ற தலைமையின் முடிவு இவனை செயலில் இறக்கியது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, “இரண்டு சிங்களப்படை உளவாளிகள் யாழ்நகர் கடையொன்றில் கூடுவது வழமை” என்ற வேவுத் தகவலின் அடிப்படையில் அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈருருளியை இவன் மிதிக்க முன்னிருக்கையில் கைத்துப்பாக்கியுடன் சகபோராளி. காலை பத்து மணிவரையில் இலக்கு கண்ணில் புலப்படவில்லை. தொடர்ந்து அவ்வீதியில் நடமாடுவதன் ஆபத்தை கருத்திற்கொண்டு தங்குமிடம் சென்று, பின் மீண்டும் மாலை நான்கு மணிக்கு நடவடிக்கை தொடர்ந்தது. இரவு எழுமநியாகியும் இலக்கு வரவேண்டிய இடத்துக்கு வரவில்லை, ஈருருளியை யாழ்நகர் கஸ்தூரியார் வீதியால் இலக்கைத்தேடி மிதிக்கையில் சற்று முன்னால் சென்ற ஈருருளியின் முன் இருக்கையில் இருந்து பயணிப்பவன் ஆக்கிரமிப்பாளனுடன் சேர்ந்து செயற்படும் கைக்கூலிக் குழு ஒன்றின் யாழ்மாவட்டப் பொறுப்பாளன் என்பதை கடைத்தெருவில் ஒளிர்ந்த மின்குமிழின் வெளிச்சம் காட்டியது. “தேடி வந்த இலக்கைவிட தற்செயலாகக் கண்ட இலக்கு பெறுமதியானது அழிக்கப்பட வேண்டிய இலக்கு வேவுத் தகவல்கள் எல்லாவற்றினையும் இவனே முடித்திருந்தான். இன்றும் முன்னிருக்கையில் சக போராளி கைத்துப்பாக்கியுடன் இருக்க ஈருருளியை இவனே இலக்கின் பெயர் கூறி இலக்கை அழைக்க, வேருட்சியுடன் “இந்தப் பெயருக்குரியவன் நானில்லை” என குற்ற உணர்வுடன் இவர்களை நோக்கி திரும்பியது இலக்கு. காட்டிக்குடுப்புக்கு வழமைபோலவே ஒறுப்பு அளிக்கப்பட்டது.

இன்னுமொருநாள், முக்கிய இலக்கு ஒன்றை அழிப்பதற்காய் பயிற்சி முடித்திருந்த தாக்குதலாளனை வன்னியிலிருந்து உப்புநீரேரி கடந்து யாழ்மன்னுக்கு அழைத்து வருகையில்…………

06.06.1999 நீரேரி ‘கவாட்டியால’ பாதங்கள் கிழிக்கப்பட்ட நிலையில் இவனும் தோழர்களும், பாசையூர் கடற்கரையிலேறி பிரசவ விடுதியை அண்மிக்க சிங்களத்தில் ‘யார்?’ என சிங்களச் சிப்பாய் வினாவ, துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்கின. கப்டன் சித்தார்த்தன் வீரச்சாவைத் தழுவ தப்பி ஓடியவன் எரிய ஒழுங்கைகள், சந்திகள் எல்லாமே படையினர். பிறகென்ன உயிர் பிழைப்பதற்கான இவனது கடைசி முயற்சி வெற்றியைக் கொடுத்திருந்தது. யாருக்குமே தெரிந்திராத ஒரு மறைவிடத்தில் ஆயிரம் கைகள் உணவூட்ட காத்திருந்தும் அக்கைகளுக்குத் தெரியாமலேயே பதுங்கிக்கிடந்தான் நாளைய பாய்ச்சலுக்காய்.

மறுநாள் அவனை அரவணைத்து தன் வீட்டின் பிள்ளையாக வைத்திருந்த தேசத்தின் அன்னை கூறினார். “என்ற பிள்ளையின்ர கால்களிலெல்லாம் காயங்கள், முள்ளுக் கீறல்கள், நான்கைந்து நாட்களாக ஒரே நாரிநோவு, பிள்ளை சோர்ந்தே போனான். இரவிரவாக நானும், அப்பாவும் காலுக்கு மருந்துபோட்டு, நாரிக்கு எண்ணெய் தடவி அவனை பிள்ளை ஆக்கினம்”.

“அம்மாவோடதான் அவன் நல்ல வாரப்பாடு 18.06.1999 அன்று அதிகாலை எழும்பியவன் என்னிடமிருந்த பயபக்தியையும் மீறி வழக்கத்துக்கு மாறாய் ஒரு நாளும் இல்லாத செல்லம் கொஞ்சினான்.

என் கைகளைப்பிடித்து “அப்பா இந்த ஆயிரம் ரூபாவை ஏதாவது அநாதை இல்லத்துக்குக் கொடுங்கோ. எனக்கு இன்று பிறந்தநாள்” என்றான். நான் பணத்தை கொடுத்து பற்றுச்சீட்டைக் கொடுக்கலாம் என்றால் “உங்களில் என்ன நம்பிக்கை இல்லை என்றா தாறியள்?” எனக் கேட்டான். கொடுக்காட்டில் எனது மனச்சாட்சிக்குப் பிழை. நான் அதைக் கொடுக்கவே இல்லை. 29 வயதில் அவனது பக்குவத்தை எண்ணி வியந்தேபோனேன்.” கலங்கும் அம்மாவின் கண்களைப் பார்த்து கலங்கியபடியே இப்படித்தான் அப்பா கூறினார்.

சக நண்பனைப் பாதிவழியில் இழந்த துயர் இவன் இதயத்தை அம்பாகத் துளைத்தாலும், தன் பாதையில், இலக்கில் அம்புபோல் செயல்படலானான்.

“யாழ் கொட்டடியில் சீனிவாசன் வீதியில் இரண்டு சிங்கலப்படைப் புலனாய்வாளர்கள் மாஸ்ரர் ஒருவரின் வீட்டுக்கு வந்து போகின்றனர்” பூட்டு எனப்படும் விடுதலைப் பற்றாளனின் வேவுத் தகவல் அது. ஒரு இரவுப்பொழுது மாலை ஏழுமணி, சக போராளியுடன் இலக்கைத் தேடிச்சென்றான். துப்புத் துலக்கி தேசப்படுவோர் தம்மைத் தேடிவருவதை அறியாத இலக்கு நகையாடிக்கொண்டிருந்தது. சக போராளியின் குறியில் ஒருவன் சரியாய் மற்றையவன் ஓட எத்தனித்தான். ஒடுபவனைக் குறிவைத்து தன்னிடம் இருந்த கைக்குண்டை எறிந்தவன், கூப்பிடு தூரத்தில் உள்ள சக படைவீரர்கள் ஓடிவரும் முன் சடுதியாய்த் தாக்குதலை முடித்துத் திரும்பினான்.

“அம்மா இன்றைக்கு உங்கட புட்டை விட்டுட்டு ஏதாவது நல்லதாய் செய்து தாங்கோ சரியா பசி எடுக்குது” புழுக்கிண்டுவதுபோல் புளுகம் கிண்ட, தாக்குதல் வெற்றியில் திளைத்தவனை அப்பாவும், அம்மாவும் புரிந்துகொண்டனர்.

“அம்மா, நான் அவசரமாக வெளியில போறான் ரேடியோவில ஏதாவது தகவல் வந்தால் பதிவுசெய்து வையுங்கோ” டேய் ஒருக்காத்தான் பழகித் தந்திட்டு பதிவுசெய் எண்டால் முடியுமே? இன்னும் ஒருக்கால் பழக்கித் தந்திட்டுப் போடா” வாசல்வரை வந்தவனை மறித்து அம்மா கேட்க, “குறித்த நேரத்துக்கு நான் அங்க நிற்கோனும் எதற்கும் விரைவாய் வரப்பாக்கிறன்”

அவசரமாய் இவன் போய்விட இவன் திரும்பும் முன்னமே தகவல்வரும் நேரத்தை மணிக்கூடு காட்டியது. அம்மாவிடம் மேலோங்கியிருந்த அறிவுப் புலமை ஒருவாறாய் அலைவரிசையைப் பிடித்து தகவலைப் பதிவு செய்துவிட்டது.

என்ன தகவல்? “நீங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? என்ற தகவலை எங்களுக்கு அனுப்பிவைக்க, தொடர்பு முறையொன்றை நீதான் தேடவேண்டும். சீரான தொடர்புகள் இன்றி செயற்படுவதில் அர்த்தமில்லை, என்ற தொனிப்பட நல்ல ஏச்சுடன் தகவல் வந்திருந்தது. “தகவலைக் கொடுத்தால் பிள்ளை நொந்துபோவான், வெந்துபோவான்” தகவலைக் கொடுக்க அம்மாவின் அம்மாவின் தாய்மை உணர்வு தடுத்தது. இயக்கத் தகவலை, அம்மா கொடுக்காமலும் இரா. தயங்கித் தயங்கிக் கொடுத்தார். அவை பற்றி அம்மா கூறுகையில், தகவலைக் காட்டியதும் நினைத்தது போலவே அவன் உடைந்தே போனான். அன்றிரவு சாப்பாடும் நித்திரையும் இன்றி கட்டிலில் உருண்டு உருண்டு புரண்டான். நான்தான் அருகிலிருந்து தேற்றினேன்” பின்னொரு நாளில், “அவன் இங்கே ஒரு நிமிசம்கூட சும்மா இருக்கிறது இல்லை காலையில் எழும்பினால் இரவுவரைக்கும் நாட்டுக்காகத்தான் உழைக்கின்றான். இனிமேல் பிள்ளைக்கு இப்படி ஏசித்தகவல் வரக்கூடாது” என அம்மா இவன் பொறுப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தா.

அம்மா வீட்டுடன், தேவையற்று ஆதரவாளர்களையோ, தொடர்பாளர்களையோ, சக போராளிகளையோ தொடர்பு படுத்தாத தன்மை மற்றும் செயற்பாட்டின்போது பயன்படுத்தும் போலி ஆவணங்கள், வேறு பெயரில் பெறப்பட்ட அவனது ஈருருளி…… அம்மா புட்டவிக்கும் போது தடயங்களை நெருப்பில் போட்டு அவை எரிந்து முடியும் மட்டும் கண்வெட்டாது பார்க்கும் பொறுப்பு புணர்வு, எப்பொழுதுமே அவனிடமிருக்கும் சைனர் குப்பி என இரகசியம் பேணுவதில், தான் சார்ந்தவர்களையும் பாதுகாப்பதில் இவனது அதீத பாதுகாப்பு உணர்வு அம்மாவுக்கு இவனை பிடித்துப் போனதில் வியப்பில்லைத்தான்.

11.09.1999 அம்மாவின் இடக்கை சுழுக்கெடுத்து நோவு எடுத்திருந்ததை அறிந்தவன் அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு மலசல கூடத்துக்கு தண்ணீர் எடுத்துவைத்து, பாத்திரங்கள் எல்லாம் தண்ணீர் நிரப்பி, வீடு கூட்டி….வீட்டுப் பனியெல்லாம் முடித்து தன் பணிக்காக பயணப்பட்டவன், வாசலில் நின்றுகொண்டு, “அம்மா இன்றைக்கு சில நேரம் வரமாட்டன் அன்றி வீட்டிலை தங்கினாலும் தங்குவேன்….” சொல்லித்தான் வெளிக்கிட்டான். எங்க அன்றி வீடு இருக்குது? கண்டிப்பாக நீ வீடு வரவேணும் என அம்மா கேட்கவும் மாட்டார். கட்டளை இடவும் மாட்டார். இரகசியம் பேணுவதில் அம்மாவும் கண்டிப்பானவர். வழமை போலவே வாசலில் நின்று அம்மா வழியனுப்பிவைக்க, அம்மா புள்ளியாய்த் தெரியும் மட்டும் அவன் கையசைத்துச் சென்றான். “என் மகன் தன்னைப் போராளியாக இணைக்கும்போதும் இப்படித்தான் கையசைத்துச் சென்றவன்” அம்மாவின் இதய அறையில் ஒன்றுக்குள் மகனும் மற்றயதுள் இவனுமாக அம்மா கனதியானார்.

12.09.1999 நல்லூர் முருகன் கோயில் வீதி மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த, பகல் பதினோரு மணிப்பொழுது, காதலியை ஏற்றிய ஈருருளிகள், மனைவியை ஏற்றிய உந்துருளிகள், குடும்பத்தைச் சுமக்கும் கார்கள், பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்புக்காய் முருகனிடம் வந்த பள்ளிக்கூட நண்பர்கள்……. என எல்லோரையும் கடந்து இவனது ஈருருளியும் சக போராளிகளினது ஈருருளிகளும் புலனாய்வுக் கண்களுடன் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தன.

நல்லூர் அரசடி வீதியை (பாரதி சிலையடி) இவனது சைக்கிள் கடக்க முற்பட, காவலரணுக்கு அருகில் நின்ற சிங்களப் படைவீரன் வழிமறித்து இவன் சைக்கிளைப் பிடிக்க, அவனை உதறிவிட்டுத் துப்பாக்கியைப் பிரித்தெடுக்கும் நோக்குடன் கவலரனுக்குள் பாய்ந்தோட, முடியாமல் போக, சைனைர் குப்பியை அவன் பற்கள் நன்றகா அரைக்க, அது அவன் உயிரைப் பிரித்துத்தான் விட்டதா?

கறுப்பு ஜீன்ஸ், சாம்பல் நிற சேட், பச்சை உள்ளாடையுடன் இளைஞனின் சடலம் செய்தித்தாளில் வந்த செய்தி அம்மாவை இடியாய் இடித்தது. உடைகள் அவனுடையதுதான். அப்பாவும் அம்மாவும் குசுகுசுத்துக் கொண்டனர். வைத்தியசாலையில் இவன் உடலைப் பார்க்க அம்மாவால் முடியவில்லை. உடலைப் பார்த்து ஓவென அழாமல் அம்மாவால் இருக்கமுடியாது. அப்படி அழுதால் சிங்களப் புலனாய்வாளர்களின் கண்களில் எத்துப்படலாம். இன்னுமொரு போராளியைத் தன் சிறகினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அம்மா வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.

அம்மா நினைத்ததுபோலவே அவனது சைக்கிள் அடையாள அட்டைகள், என்பனவற்றை படையினர் கைப்பற்றியிருந்த போதிலும் அம்மாவின் வீட்டை இனங்காண முடியவில்லை.

“அவன் நிறையவே சாதிக்கவேண்டியவன் வன்னிக்கு எடுத்து கதைப்பம் என்றிருக்க இப்படி நடந்துபோய்ச்சு…. அவனுக்குத் தெரிந்த நிறையச் சனம் வருமென்று தெரிந்தும் அதற்குள்ள போயிருக்கிறான்….” என்ற புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையிலும்,

“விடுதலை வீரனின் சுயலனமற்ற பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமுடையது. விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான்” என்ற தலைவரின் பார்வையிலும் இவனது வாழ்வு உன்னதமானது.

நினைவுப்பகிர்வு:- சி.மாதுளா.
விடுதலைப்புலிகள் (கார்த்திகை 2003) இதழிலிருந்து

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.