இரும்பக உரிமையாளர் விவகாரம் – சந்தேகநபரிடம் 48 மணிநேரம் விசாரணை!!

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.


குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவேண்டும் என்றும் இந்த கொலையின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த சந்தேகநபரின் சட்டத்தரணி வினோராஜ், பிணை வழங்க மன்றுரைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளைத் துரிதப்படுத்த பொலிஸாரை அறிவுறுத்தியதுடன், சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். அத்தோடு வழக்கு விசாரணைகள் நாளைமறுதினம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மாலை வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி 30ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் சி.சி.ரி.வி காணொளிகள் பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கொக்குவிலைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.