தோனியின் எதிர்காலம்: கங்குலி நினைப்பது என்ன?

பிசிசிஐ புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக் குழுவினருடனான சந்திப்பின் போது பேசுவேன் என்றும் வரும் 24ஆம் தேதி இது குறித்து தனது கருத்தை கூறவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பின், இந்திய அணியில் தோனி விளையாடவில்லை. நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடர், தற்போது நடந்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றில் தோனி தாமாகவே விலகிக்கொண்டார். உலக கோப்பை போட்டியில் அவரது பேட்டிங் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்த கருத்துக்கள், சமீப காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக மாறிவருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கங்குலியிடம், நேற்று(அக்டோபர் 16) கொல்கத்தாவில் செய்தியாளர்கள், தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்கள் தோனியைக் குறிப்பிட்டு ஒரு கிரிக்கெட் வீரரால் எந்தக் காரணமுமின்றி இவ்வளவு நீண்ட ஓய்வு எடுக்க முடியுமா என்று கங்குலியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த கங்குலி, "தோனி ஏன் ஓய்வில் இருக்கிறார், எதற்காக ஓய்வில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. வரும் 24ஆம் தேதி தேர்வுக் குழுவினரை நான் சந்தித்துப் பேசுகிறேன்.
அவர்களைச் சந்திக்கும்போது தோனி குறித்து அவர்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பதை அறிவேன். தோனியிடமும் பேசுவேன். அதன்பின் தோனியின் எதிர்காலம் குறித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்றார். அத்துடன், “தோனிக்கு என்ன தேவை என்பதையும் அறிய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நவம்பர் மாதம் வங்கதேசம், இந்திய அணிகளுக்கு இடையே மூன்று டி20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான அணித் தேர்வும் வரும் 24ஆம் தேதி நடக்கிறது. இத்தொடரில் தோனி விளையாடவுள்ளாரா இல்லையா என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.