அம்மா என்றால் சும்மா இல்லை!!

ஒரு ஆண் கல்வி கற்பது தனக்கானது என்றும் ஒரு பெண் கல்வி கற்பது சமூகத்திற்கானது என்றும் கூறுகின்றனா்.  இந்த வார்த்தைகள் எந்தளவிற்கு பொருத்தமானது என நாம் சிந்தித்தாலும் அதில் பாதியளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.  ஒரு ஆணின் கற்றல் என்பது பெரும்பாலும் தனது வருமானத்தினை அண்டியதாகவே காணப்படுகின்றது,

ஆண்கள், மேலதிக வகுப்புகள், குழு வகுப்புகள் என ஓடி ஓடி உழைக்கும்  அளவிற்கு பெண்கள் தமது கல்வித்தகுதியைப் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் வீடு, குடும்பம், பிள்ளைகள் என்ற வட்டத்திற்குள்ளும் அவர்களே நின்றாக வேண்டும். ஒரு தாயால் தான் அவளது பிள்ளைகள் சிறக்கின்றார்கள், தாயின் அறிவூட்டலும் ஆளுமையும் தான் பிள்ளைகளை வருடிக்கொள்கிறது.  அப்பாவைக்காட்டிலும் அம்மாவிடம் பிள்ளைகள் காட்டும் ஈடுபாடு அதிகமே. அதன் காரணம், அப்பாவைவிட பிள்ளைகள் அம்மாவிடம் அதிகநேரத்தை செலவிடுவதே ஆகும்.  ஒரு அம்மா, தாயாக மட்டுமன்றி ஆசானாகவும்   தோழமையாகவும் மாறுவது இயல்பானதே.

பெண்மை தாய்மையில் சிறக்கிறது. தாயானவள் தன் ஆளுமையினாலேயே தன் பிள்ளைகளிடம் சிறக்கிறாள். பெரும்பாலும் பிள்ளைகளை கவனிக்கும், வளா்த்தெடுக்கும்  பொறுப்பு தாய்மாரிடமே உள்ளது. அந்தப் பொறுப்பில் வெற்றியடையவேண்டும் என்றால் ஆற்றல் நிறைந்த ஒரு உலகில் பிரவேசிக்கவேண்டும். ஆளுமை மிக்கவர்களாக தம்மை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

பிள்ளைகளைப் பொறுத்த வரையில் அம்மா எப்போதும் பிரமிப்பாகவே இருக்க வேண்டும். 'எனக்குத் தெரியாது' எனச் சொல்லும் அம்மாக்கள் பிள்ளைகளால் அவ்வளவாய் ஈர்க்கப்படுவதில்லை. உங்கள் பிள்ளைகளிடம் நிறையப் பேசுங்கள், அப்போது நிறைய அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வீர்கள். உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு இரு மடங்கு அவர்கள் சிந்திப்பார்கள்.

எதையாவது தேடிப் படியுங்கள். படிப்பு என்பது கல்வி மட்டுமல்ல,  புத்தகங்களைத் தேடிப் படிப்பதும் தான்.  பிள்ளைகளுக்கும் நமக்கும் எல்லைக்கோடு ஒன்றிருக்கும். அதை அவர்கள்  தாண்டிவராமலும்  நாம் அதைத் தாண்டிப் போகமாலும் தேவையான சுதந்திரத்தை வழங்கவேண்டும். எவ்விதம் அச்சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தாய் பிரமிப்பாகவே இருக்க வேண்டும். பிள்ளைகள் என்பவர்கள், கற்றுக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள், கற்றுத் தருபவா்களாகவும் இருப்பார்கள்.

தாய் என்பவள், அன்பின் பிறப்பிடமாக மட்டுமன்றி ஆளுமையின் சிறப்பிடமாகவும் இருக்கவேண்டும். அம்மாவிடம் இருந்து பிள்ளை அறிந்துகொள்வதைக் காட்டிலும் அதிகமாக வேறு யாரிடமும் அறிந்துகொள்ள முடியாது. உலக வரலாறுகள் பற்றியும் ஆளுமையாளா்கள் பற்றியும் சாதனையாளா்கள் பற்றியும் பிள்ளைகளோடு உரையாடுங்கள். நாம் வாழும் வாழ்க்கையின் உண்மைத்தன்மையையும், அதில், வந்துபோகும் பொய்களையும் பற்றி சொல்லிக்கொடுக்கவேண்டும்.

உறவுகளைப் பேணவேண்டியதன் அவசியத்தை, சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் உங்கள் வாழ்வியல் நடைமுறையில் நடந்து காட்டுங்கள். அதுவே அவர்களின் பிற்கால வாழ்வில் நின்றுநிலைக்கும்.

அம்மா திருவள்ளுவரைப்பற்றியோ, பாரதியாரைப் பற்றியோ, விவேகானந்தரைப்பற்றியோ  சொன்னாலே   பிள்ளை அதனைத் தேட ஆரம்பிக்கும். இருபத்தோராம் நூற்றாண்டின், வாழ்வியல் முறை பற்றியும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் சொல்லுங்கள். வாழ்ந்த வரலாறுகளையும் இழந்த நிம்மதியையும் பற்றி சொல்லுங்கள், உண்மைகளை உரத்துச் சொல்லுங்கள், அப்போதுதான்,

பிள்ளை,  தன் நண்பா்களிடம் அவ்விடயம் பற்றி விபரிக்கும். செய்தித்தாள்களை வாசிப்பதோடு நின்றுவிடாது அன்றைய நாட்டுநடப்பு பற்றி பிள்ளைகளிடம் அலசி ஆராயுங்கள். அப்போது தான் பிள்ளை சமூகத்தை அறிந்துகொள்ளும். தான் வாழும் சூழலை தெளிவாகப் புரிந்துகொள்ளும். மாற்றங்களுக்கும் நியதிகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். சமூக நீரோட்டத்தோடு இணைந்து ஓடத்தொடங்கும்.

அம்மா என்பவள் பிரமிப்பிற்குரியவள் என உணா்ந்துவிட்டால் நிச்சயமாக அதே பிரமிப்பினை பிள்ளைகளும் காண்பிப்பார்கள். அன்போடு அறிவும் ஆற்றலும் கொண்ட அம்மாக்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு பிரமிப்பாகவே உள்ளனா்.  நல்லவற்றை தெளிந்து அறிந்து அதை ஏற்றுக்கொள்ளும் அம்மாக்களின் பிள்ளைகளே உலகின் வெற்றியாளர்களாக மிளிர்வார்கள் ......

கோபிகை
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.