உழவுயந்திரம் தடம் புரண்டது!📷

உழவுயந்திரம் தடம் புரண்டதில்
எட்டு தொழிலாளர்கள் காயம்
-பொன்னாலைச் சந்தியில் சம்பவம் இடம்பெற்றது.


தார்ப் பரல்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவுயந்திரம் ஒன்று பொன்னாலைச் சந்தியில் தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் படுகாயமடைந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

காரைநகரில் வீதிப் புனரமைப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் உழவுயந்திரத்தில் 10 தார்ப்பரல்களையும் ஏற்றிக்கொண்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியூடாகச் சென்று பொன்னாலைச் சந்தியால் காரைநகர் வீதிக்கு திரும்ப முற்பட்டனர்.

வேகமாகச் சென்ற உழவுயந்திரம் பொன்னாலைச் சந்தியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது உழவியந்திரப் பெட்டி உழவியந்திரத்தை விட்டு தனியாகக் கழன்று தடம் புரண்டது. 

இந்த விபத்தின்போது, உழவுயந்திரப் பெட்டி தலைகீழாகக் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்தவர்களில் சிலர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் பெட்டிக்குள் அகப்பட்டுக்கொண்டனர்.

அவர்கள் தார்ப்பரல்களுடன் சேர்ந்து வீழ்ந்தனர். பெட்டிக்குள் சிக்கியவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த இருவர் உட்பட 6 பேர் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மற்றைய இருவர்  காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டுசெலலப்பட்டவர்கள் பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.

இந்த விபத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவர்களான மு.நாகமுத்து (வயது-65), மா.ஸ்ரீவானந்தம் (வயது-45), நா.றஞ்சன் (வயது-41), வ.தினுஜன் (வயது-18), ரா.தபுசன் (வயது-21), வ.பசுங்கிளிராசா (வயது-63) ஆகியோரும் பல்லசுட்டியைச் சேர்ந்த வ.வசிகரன் (வயது-34), எஸ்.துஜிபன் (வயது-20) ஆகியோருமாக 8 பேர் காயமடைந்தவர். இவர்களில் நாகமுத்து, வசிகரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

பசுங்கிளிராசா, துஜீபன் ஆகியோர் காரைநகர் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனையோர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதி வேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.