மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேடு: திமுக புகார்!

மறைமுகத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.


27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. பல இடங்களில் அதிமுக, திமுக ஆகியவை சமபலம் வகித்ததால் பதவிகளைக் கைப்பற்றுவதில் போட்டி நிலவியது. மேலும், பல ஒன்றியங்களில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

இந்த நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், “மறைமுகத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்” என்று புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “திமுக மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் தேர்தல் ஆணையம் மறைமுகத் தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என்று புகார் கூறிய வண்ணம் உள்ளனர். இந்த புகார்களை தேர்தல் ஆணையரிடம் எடுத்துச் சென்று, அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். உடனடியாக பரிசீலிக்கிறோம் என்று வழக்கமாகக் கூறுவதையே தேர்தல் ஆணையர் கூறினார்” என்று தெரிவித்தார்.

மேலும், “ தமிழகத்தின் பல மாவட்டங்களில் மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. எங்கு திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதோ, எங்கு திமுக வெற்றிபெறும் என்ற நிலையில் உள்ளதோ அங்கெல்லாம் அதிமுகவினர் பிரச்சினையில் ஈடுபட்டு தேர்தலை நிறுத்த முயற்சித்தனர்” என்று குற்றம்சாட்டிய பாலு, “சில இடங்களுக்கு தேர்தல் அதிகாரிகளே வரவில்லை. கேட்டால் உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறுகிறார்கள். சில இடங்களில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்த பிறகு தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கிறது. எவ்வாறு இப்படி நிறுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்தால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதான் அதனை நிறுத்த முடியும்” என்றும் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.