யாழ் குப்பிளானில் வீடு புகுந்து கொள்ளை!!

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.


குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினர் இருவர் வீட்டின் பாதுகாப்புக் கருதி வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இளைஞன் மற்றும் நடுத்தர வயதுடையவரை அச்சுறுத்தி வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த இளைஞன் மீதும் கொள்லையர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி, கைச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட தங்கநகைகளையும், ஒருதொகை வெளிநாட்டுப் பணத்தையும், பெறுமதி வாய்ந்த மூன்று நவீன கைத்தொலைபேசிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுமார் ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பலே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் , கொள்ளையிட வந்தவர்கள் தங்கள் முகங்களை கறுப்புத் துணிகளால் மறைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.