ஆகம விதிகளின்படி குடமுழுக்கு: அறநிலையத் துறை!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படியே நடைபெறும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு வரும் பிப்ரவரி 5ஆம் நாள் குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில், “தஞ்சை பெரிய கோயில் சைவ ஆகம விதிப்படி கட்டப்பட்டது. சைவ ஆகம விதிகளின்படி கட்டப்படும் கோயில்களில் பூஜைகள் உள்ளிட்ட அர்ச்சனைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகளும் உள்ளன. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று (ஜனவரி 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை பெரிய கோயிலில் கடைசியாக எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், ‘சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், “அந்த சமயத்தில் தமிழில் அர்ச்சனை செய்ய பயிற்சி பெற்றவர்கள் இல்லை. இப்போது சைவ அர்ச்சக நிலையங்களில் பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். ஆகவே, அவர்களை பயன்படுத்தி தமிழிலேயே குடமுழுக்கு நடத்தலாம்” என்று கருத்து தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடைபெறும்” என்று தெரிவித்தார். இவற்றைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Blogger இயக்குவது.