‘ஆன்மிக’ நடிகர் ரஜினியும் சங் பரிவாரங்களும் கட்டவிழ்த்துவிடும் பொய்!

எஸ்.வி.ராஜதுரை

சேலத்தில் 1971இல் பெரியார் தலைமையில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்துக் கடவுள்களின் உருவங்கள் நிர்வாணமாகக் காட்டப்பட்டதாகவும் இராமன் படத்தை பெரியார் செருப்பால் அடித்ததாகவும், அந்த செய்தியை ‘துக்ளக்’ துணிச்சலுடன் வெளியிட்டதாகவும் ‘துகளக்’ ஆண்டு விழாக் கூட்டத்தில் தான் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு வந்ததும் சினிமா பாணியில் ‘ நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று கூறிய ரஜினி, இப்போது அந்த செய்தி ‘அவுட்லுக்’ பத்திரிகையில் வெளிவந்தது என்று பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறார்.



அது மட்டுமல்ல; ‘அவுட்லுக்’ ஏடு ‘ தி ஹிந்து’ குழுமத்தைச் சேர்ந்தது என்றும் உளறியிருக்கிறார். அந்த செய்திக் கட்டுரையை எழுதியவர் பாஜக ஆதரவாளர். இந்துக் கடவுள்கள் பெரியார் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் நிர்வாணமாகக் காட்டப்பட்டனர் என்பதை ‘துகளக்’ ஏட்டின் அண்மைய இதழ் வெளியிட்டிருக்கும் படமொன்றே மறுத்துள்ளது. அந்தப் படத்தில் ராமர் செருப்பு மாலையுடன் காட்சியளிக்கிறாரேயன்றி நிர்வாணமாக அல்ல; சங்கிகளின் புளுகுகளுக்கு மாறாக, இந்தப் படத்தில் சீதையே இல்லை.



1971இல் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடந்ததாய்க் கூறும் நிகழ்ச்சியை 2019 இல் ரஜினி கூறுவதன் நோக்கம் என்ன? இதன் பின்னணி யார்? சுப்பிரமணியன் சுவாமியிடம் ரஜினி தொலைபேசி மூலம் யோசனை கேட்க வேண்டிய அவசியம் என்ன? 1971ஆம் ஆண்டு நிகழ்வுக்கு 2017 இல் ’அவுட்லுக்’கில் வெளிவந்த சேகரின் கட்டுரையை, பிரச்சனை பெரிதானபின், ஒருவாரம் கழித்து ரஜினி பொதுவெளியில் வெளியிடுவதன் மர்மம் என்ன? ஓராண்டிற்குள் நடந்த செய்தியே கண்ணும் காதும் வைத்து 


பூதாகரமாக்கப்படுகையில், 46 வருடம் கழித்து பாஜக ஆதரவாளர் சேகர் எழுதிய, காதால் கேட்ட செய்தியின் ”உண்மை” எப்படியிருக்கும்?


சங் பரிவாரம் வலுவாக உள்ள மாநிலங்களில் தபோல்கர், குர்புகி, கெளரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதைப் போல தமிழகத்திலும் பத்திரிகை/கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப் பூட்டு போடப்படுவதாக ஒரு பார்ப்பனப் பத்திரிகையாளர் கூறியதை முதன்மைப்படுத்துகிறது இந்த ‘அவுட்லுக்’ கட்டுரை. ரஜினி போங்க் சாப்பிட்டுப் பைத்தியம் பிடித்தது மாதிரி நடந்ததை நாம் இப்போது பேசினால் எப்படியிருக்கும்? இது அவதூறு பரப்புகிற நோக்கமில்லாமல் வேறென்ன? 


இது எல்லாமே குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு , மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு மோடி-ஷா அரசாங்கம் வேகவேகமாக செய்துவரும் நடவடிக்கைகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வுக்கான அனுமதி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காவிரிப் படுகையை பாலைவனமாக்கும் முயற்சிகள் முதலியவற்றுக்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பைத் திசை திருப்ப நடக்கிற நாடகம். இதில் ரஜினி முக்கியப் பாத்திரமேற்று நடிக்க ‘ அட்வான்ஸ்’ வாங்கியிருக்கிறார் என்று கருதலாமா?


இந்திய அரசியல் சட்டத்தை எழுதிய அண்ணல் அம்பேத்கர் இராமனைப் பற்றி எழுதியவற்றை சங் பரிவாரத்தில் முன்பு மறைமுகமாகவும் இப்போது நேர்முகமாகவும் இணைந்துள்ள ’ஆன்மிக’ நடிகர் ரஜினி காந்தும் சங்கிகளும் படிக்க வேண்டும். அம்பேத்கர் எழுதியுள்ள ‘ இந்து மதத்தின் புதிர்கள்’ நூலின் பாகம் 3இல் இணைப்பாகத் தரப்பட்டுள்ள ‘ராமன் சீதை என்ற புதிர்’ என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள் மட்டுமே இங்கு தரப்படுகின்றன. இந்த இணைப்பு முழுவதையும் படித்தால் ’ஆன்மிக’ நடிகருக்கு கைகால் உதறி ஒரு திரைப்படத்தில் அவர் நடித்திருப்பது போல ‘ கடவுளே,கடவுளே, கடவுளே’ என்று பதைபதைப்புக் கொண்டுவிடுவார்.


அம்பேத்கர் எதையும் புனையவில்லை. மாறாக, வால்மீகி இராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளதைத்தான் விளக்குகிறார் – புராணங்களில் இந்துக் கடவுள்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளதைத்தான் பெரியார் எடுத்துக் கூறியதைப் போல. தமிழ் ஆண்டுகள் என்று 60 ஆண்டுகளே திரும்பத் திரும்ப வருவது ஏன் என்பதற்காக புராணங்களில் எழுதப்பட்டுள்ள மிக ஆபாசமான கதைகளை சங்கிகளும் ’ஆன்மிக நடிகரும்’ மக்களிடையே பரப்ப முன்வருவார்களா?

இனி அண்ணல் அம்பேத்கர் எழுதியவற்றிலுள்ளவற்றைப் பார்ப்போம்:


“இராமாயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவதரித்ததாக வால்மீகி கூறுகிறார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்கவிருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக் கூடிய வல்லமை மிக்க துணைவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை.


இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமின்றி யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமின்றி முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்கு துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்.
இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக்கேடானது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக்குரியது. இராமன், சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. 


பௌத்தர்களின் இராமாயணத்தின்படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்கு பிறந்த மக்கள். பௌத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை.


வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்கு தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்கு பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகையிலேயே சீதை ஜனகனுக்கு மகளானாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் படியே கூட சீதை, ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகிறது. 

எனவே பௌத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது.


அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). 


ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. 

வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.


ராமன் சீதையோடு வாழ்ந்த காலங்களிலும் சரி, அவளைப் பிரிந்து அரசாண்டகாலங்களிலும் சரி, தினமும் தனக்கான ஓய்வு இல்லத்தில் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தான். அப்போது அழகிகளின் நடனக்கேளிக்கைகளும் நடைபெறும். எனவே கேளிக்கைகளில் திளைத்து மகிழும் ஒரு அரசன் என்பதைத் தாண்டி ராமனுக்கான பாத்திரமில்லை”.
கட்டுரையாளர் குறிப்பு:
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.