பூமிக்கு வந்த ஏலியன்? பீதியைக் கிளப்பிய பிளாக் ரிங்!

லாகூர் அருகே வானில் வட்ட வடிவில் பறந்த கறுப்புப் புகை, பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டார்களா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறு வயதில் நாம் வாழும் பூமி ஒரு கோள் என்பதை முதன்முதலில் அறிந்த போது அது பல்வேறு ஆச்சரியங்களை நமக்குத் தந்திருக்கும். பூமியைப் போன்று வேறு கோள்கள் இருக்கலாம் என்றும், நமது தொழில்நுட்பங்களால் சென்றடைய முடியாத தொலைவில் நம்மைப் போன்ற மனிதர்களோ அல்லது பிற உயிரினங்களோ இருக்கலாம் என்றும் அறிவியல் ஆசிரியர் நமக்குள் ஆச்சரியத்தை விதைத்திருப்பார். அதைக் கேட்டு நமது கற்பனையும் பல கோணங்களில் விரிந்திருக்கும். தலைக்கு மேலே பறந்த விண்கலமும், வீடு தேடி வந்த வேற்றுக்கிரக வாசியும் பலரது கனவிலும் வந்து சென்றிருக்கும். ஏலியன்கள் பூமிக்கு வந்ததாகப் பல கதைகளையும் யூட்யூப் வீடியோக்களாகப் பார்த்திருப்போம்.
அந்தவகையில் மறந்து போன ஏலியன் கதையை மீண்டும் நினைவில் கொண்டு வந்துள்ளது வானில் பறந்த ஒரு மர்ம வட்டம். லாகூர் அருகே வளைய வடிவில் கறுப்புப் புகை வானில் பறந்து நீங்கியதை ஒருவர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோவை அவர் சந்தேகத்துடன் ட்விட்டரில் பதிவிட்ட போது பலரும் அதே பயத்துடன் தங்கள் அனுபங்களையும் பதில்களாகப் பகிர்ந்தனர்.
வேறு சில இடங்களிலும் அது போன்ற வட்டப் புகையை தாங்கள் பார்த்ததாக வீடியோ ஆதாரத்துடன் பலரும் பகிர்ந்தனர். இது போன்ற நிகழ்வு ஏற்படுவது புதிதல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவும் கறுப்புப்புகை வளைவு வானில் தோன்றியதற்காக வீடியோக்கள் இருக்கின்றன.ஏலியன்கள் வந்ததன் அடையாளமாகத் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது எனப் பலரும் கூறி வந்தனர். வினாவாக எழுந்த இந்த மர்மத்திற்கு கற்பனைக் கதையான ஏலியனைப் பலரும் விடையாக்கினர். சிலர் ‘ஒரு வேளை யாரேனும் புதிய ரக சிகரெட் ஏதேனும் புகைத்திருப்பர்’ என்று கிண்டல் செய்யவும் துவங்கினர். எனினும் ஏலியன்கள் வந்து விட்டார்களா? என்பது அச்சமாக மாறியது.
இந்த நிலையில் இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் என்று ஒருவர் வீடியோவை வெளியிட்டு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவில் வளைய வடிவ கம்பி ஒன்றில் எண்ணெய் போன்ற திரவத்தை ஊற்றி ஒருவர் தீ வைக்கிறார். தொடர்ந்து ஒரு கருவி மூலம் ஏதோ ஒரு வாயுவை அதை நோக்கி பம்ப் செய்கிறார். அந்தத் தீ வான் நோக்கி எழும் போது கறுப்புப்புகையாக வளைய வடிவில் பறந்து செல்கிறது. அதே போன்ற புகை தான் தற்போது லாகூரிலும் தென்பட்டிருக்கிறது என்பதால் மனிதர்களால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இருப்பினும் இதை உருவாக்கிய மனிதர் யார் என்று உறுதியாகக் கண்டறியப்படாததால் சமூக வலைதளங்களிலும் ஏலியன் கதைகள் தொடர்ந்து உலவி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.