"ஓம் நமச்சிவாய" எனும் நஞ்சுண்டோன்!!

சிரம்தன்னில் கங்கை கொண்டோன்
பிறை நிலவும் உடன் கொண்டோன்
முக்கண் படைத்தவனை
முறையாய் தொழுவோர்க்கு
குறைகள் யாவும் தீரும்
பிறவிப் பயனெல்லாம் சேரும்...!!

பாலோடு பஞ்சாமிர்தம்
மணம் கமழ் சந்தனம் முதலாய்
வாசனைத் திரவியம் பன்னீர்
வளம்விளை இளநீருடனே
பரமனுக்கு அபிஷேகம்
பாங்காய் செய்தாலே
தோஷங்கள் யாவும் நீங்கி
- வாழ்வினில்
சந்தோஷம் நாளும் பெருகும்...!!

பம்பையைக் கரந்தன்னில் கொண்டோன்
பாபங்கள் தீர்த்திட வல்லோன்
பாதங்கள் தினமே பணிய
செய்வினை யாவும் நீங்கி
மாறாத இன்பம் பெருகும்
தேனாக வாழ்வும் மாறும்...!!

"ஓம் நமச்சிவாய" எனும்
நஞ்சுண்டோன் மந்திரந்தன்னை
நாளும் உரைத்திடவே
நலங்கள் யாவும் சேரும்
நன்மைகள் பலவும் கூடும்...!!
Blogger இயக்குவது.