சிஏஏ - ஒரு இன்ச் கூட பின்வாங்கமாட்டோம்: அமித்ஷா!
குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூட பின் வாங்கப்போவதில்லை என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிஏஏவுக்கு எதிராகப் போராடுவதாகக் காங்கிரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பெங்களூருவில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், அகதிகளுக்கு எதிராகப் போராடுவதாகக் காங்கிரஸை கடுமையாகத் தாக்கி பேசியிருந்தார்.
இதற்குக் காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. அகதிகளுக்கு எதிராகப் போராடவில்லை, நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான உங்களின் செயலுக்குத் தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இன்று உள் துறை அமைச்சர் அமித்ஷா சிஏஏவுக்கு எதிரான காங்கிரஸின் போராட்டத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிஏஏவுக்கு ஆதரவாக ஜோத்பூரில் நடந்த பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து வந்தாலும், அதிலிருந்து பாஜக ஒரு அங்குலம் கூட பின் வாங்காது. காங்கிரஸ் அவர்களுக்கு ஏற்ற வகையில் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “ராகுல் பாபா, நீங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாகப் படியுங்கள். படிக்க முடியவில்லை என்றால் அதனை இத்தாலியில் மொழிபெயர்க்க உங்களுக்கு உதவுகிறேன். தயவு செய்து படியுங்கள். பின்னர் தைரியம் இருந்தால் விவாதத்துக்கு வாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.
சிறுபான்மையினர் இந்தியாவில் கவுரவமாக வாழ்ந்தனர். மற்ற நாடுகளில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. குடியுரிமை வழங்குவதற்காக என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை