குரூப் 4 தேர்வில் முறைகேடு?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆவணங்களை சரிபார்த்த பின் விளக்கம் அளிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) - 397, ஜூனியர் அசிஸ்டெண்ட்(non security) - 2688, ஜூனியர் அசிஸ்டெண்ட் (security)- 104 பில் கலெக்டர், கிரேடு - I -34, ஃபீல்டு சர்வேயர் - 509, டிராப்ட்மேன்- 74, தட்டச்சர் - 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 என 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


5575 மையங்களில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, நவம்பர் 12ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. இதனிடையே, குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி நவம்பர் 25 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. 6,491 இல் இருந்து 9,398 ஆக பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


இதையடுத்து, குரூப்-4 பணிக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்களில் 40 பேர், முதல் 100 இடங்களில் தேர்வாகி உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து குரூப் 4ல் கலந்து கொண்ட தேர்வர்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அந்த இரு மையங்களில் தேர்வெழுதியவர்களில் முதல் 100 பேரில் 40 பேர் எப்படி தேர்ச்சி பெற்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


அதே சமயத்தில் தேர்வு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த பிறகே விளக்கமளிக்க முடியும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.