நாடு தழுவிய போராட்டம் : சென்னையில் கைது!
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல், கைதுகள் என பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் இந்த வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்களுக்கு எதிராகக் கொள்கையைக் கைவிட வேண்டும், குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.21,000 முதல் ரூ.24,000 வரையில் உயர்த்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக்கூடாது, வேலைவாய்ப்பை உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடைபெற்று வருகிறது. ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ, எல்பிஎப், ஏஐசிசிடியூ, எல்எல்எப், எம்எல்எப், ஏஐயூடியூசி என 10 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஸ்டீல், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்த நிலையிலும் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி
இன்று காலை 6 மணி முதலே முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. மாநிலத்தில் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டெம்போக்கள் என மற்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் இருக்கும் வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. இதுதவிர காரைக்கால் உட்பட 11 இடங்களில் மறியலும் நடைபெற்று வருகின்றன. இதனால் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
இன்று மருத்துவ விடுப்பு எடுத்த ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது என்று தலைமைச் செயலாளர் சண்முகம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் வேனில் ஏற்றும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
எனினும் போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் வழக்கம் போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளிலும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை
கேரளா
கேரளாவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதால் அங்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து குமரி மாவட்டம் வழியாகச் செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கேரள எல்லைப் பகுதியில் வேலைக்குச் செல்வோருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். மும்பையில் பாரத் பெட்ரோலியம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் காஞ்சரபர பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புர்தான் பகுதியில் நடைபெற்ற பாரத பந்த்தில் திருணமூல் காங்கிரஸுக்கும் மாணவர் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை