எங்கள் அழிவினை நாங்களே சுதந்திரமென இயம்பும் இழிநிலை!

எங்களிடம் அது இல்லை!!
அவர்கள் வீதிகளில் தாமரையை மணந்தபடியிருக்கிறார்கள்
எங்கள் விரல்களில் முட்களைத் தைத்தவாறு

எங்களிடம் அது இல்லை
அவர்கள் கொடிகளைப் பறக்கவிடுகிறார்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுள் தேடுங்களென நகைத்தவாறு

எங்களிடம் அது இல்லை
அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடுகிறார்கள்
எங்கள் குரவ்வளைகளை உடைத்து
உணர்வுகளை அடைத்தவர்களாய்

எங்களிடம் அது இல்லை
அவர்கள் முட்களால் கிரீடம் அணிந்து சிரித்தவராய்
எங்களிடம் மண்டையோட்டைத் தந்து
சாந்தி கிரியை செய்யப் பணித்தவராய்

எங்களிடம் அது இல்லை
அவர்கள் வரலாற்றை வெட்டித் தின்றவராய்
எங்களிடம் எங்களுக்கான வரலாறற்ற
பேராற்றில் மாண்டவராய்

எங்களிடம் அது இல்லை
எங்கள் வேங்கைகளைச் சிம்மங்களாக்கிச் சிரித்தவராய்
எங்கள் அழிவினை நாங்களே சுதந்திரமென
இயம்பும் இழிநிலை பூண்டவராய்
Blogger இயக்குவது.