போலீசுக்குத் தெரியாமல் காதலியின் உடல் எரிப்பு: கெளரவக்கொலை என காதலன் புகார்

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்த கல்லூரி மாணவியின் உடல் போலீசுக்குத் தெரியாமல் எரிக்கப்பட்டதால் அவரை கெளரவக்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரிடம் காதலன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரனின் மகள், வயது 19 சாவித்திரி. இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த பெயின்டராகப் பணிபுரியும் வயது 20 விவேக் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாவித்திரி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் சாவித்திரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இது குறித்து அவர் காதலன் விவேக்கிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக காரில் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சோதனைச்சாவடியில் காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதில் விவேக்கிற்கு 21 வயது நிரம்ப இன்னும் நான்கு மாதங்கள் இருந்ததால், சாவித்திரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து பெற்றோர் வீட்டில் சாவித்திரி இருந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டுவிட்டதாகவும் விவேக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து விவேக் மற்றும் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுசீலா, மாவட்டச் செயலாளர் சலோமி மற்றும் நிர்வாகிகள், சி.ஐ.டி.யூ.வினர், இந்திய மாணவர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரை நேற்று முன்தினம் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.



அதில், சாவித்திரி தற்கொலை செய்திருக்க மாட்டார் எனவும், அவர் கெளரவக்கொலை செய்யப்பட்டிருப்பார் எனவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அவர் ஆலங்குடி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.



இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாவித்திரி தரப்பினர், அவர் தற்கொலை செய்ததாகவும், உடனடியாக உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து வந்த நிலையில் காதலி திடீரென இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை கெளரவக்கொலை செய்திருக்கலாம் என மாதர் சங்கத்தினரும், காதலனும் புகார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் மாதர் சங்கத்தினர் நேற்று புகார் மனு அளித்தனர். மாணவியின் உடல் எரிக்கப்பட்டதால், அவரது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

-ராஜ்
Blogger இயக்குவது.