ஆசியாவிலேயே பெரிய மின்சக்தி நிலையம்

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று (ஜூலை 10) நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1,500 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், 15 லட்சம் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.



2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிப்பதில், இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ”ரேவா சூரிய மின்சக்தி திட்டம் மூலம், இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, டெல்லி மெட்ரோ ரயிலுக்கும் மின்சாரம் கிடைக்கும். ரேவா தவிர, ஷாஜாபூர், நீமச் மற்றும் சத்தர்பூர் ஆகிய இடங்களிலும், சூரிய மின்சக்தி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்போது மட்டும் அல்ல, 21ம் நூற்றாண்டின் எரிசக்தி தேவைக்கும், சூரிய மின்சக்திதான் தீர்வாக இருக்கும். ஏனென்றால், சூரிய மின்சக்தி உறுதியானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது” என்று குறிப்பிட்டார்.

 ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே மின்தொகுப்பு என்பதன் பின்னணியில் உள்ள கருத்து, இந்த உலகில் உள்ள சிறிய நாடுகளின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்றுவதுதான் என்று குறிப்பிட்ட பிரதமர், “வளரத்துடிக்கும் இந்தியாவின் மின்சக்தி தேவைகளை 21வது நூற்றாண்டில் பூர்த்தி செய்வதில் சூரிய மின்சக்தி பெரும் பங்கு வகிக்கும். தற்சார்பு மற்றும் வளர்ச்சியின் முக்கியப் பகுதி பொருளாதாரம்.


பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துவதா அல்லது சுற்றுப்புறச்சூழல் மீது கவனம் செலுத்துவதா என்ற கேள்வி எழும்போது, சூரிய சக்தித் திட்டங்கள் மற்றும் இதர சுற்றுப்புறச் சூழலுக்கு நட்பான நடவடிக்கைகளின் மூலம் இத்தகைய குழப்பங்களை இந்தியா களைவதாக கூறினார். பொருளாதாரமும், சுற்றுப்புறச் சூழலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல” என்றும் கூறினார்.

 சூரிய மின்சக்தியில் இந்தியாவின் சிறப்பான வளர்ச்சி உலகத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை ஊட்டும் விஷயமாக இருக்கும் என்றும், இத்தகைய முக்கிய நடவடிக்கைகளால், தூய்மையான எரிசக்தியின் மிக ஈர்க்கக்கூடிய சந்தையாக இந்தியா கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத்தின் முக்கிய ஏற்றுமதியாளராக வெகு விரைவில் இந்தியா மாறும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து பேசிய பிரதமர், அக்கறை மற்றும் விழிப்புணர்வு ஆகியவை அரசுக்கும், சமுதாயத்துக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருப்பதாகத் தெரிவித்தார். எழில்
Blogger இயக்குவது.