திருக்குறள், பெரியார் சிந்தனைகள் நீக்கம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் பாடம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.



கொரோனா ஊரடங்கைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களின் பாடச் சுமை 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று ஜூலை 7 ஆம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, 10 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்ற பாடப் பிரிவுகளும், 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டன.

தற்போது சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு உள்ளிட்டவையும், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.

தமிழின் சிறப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கையில், “சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் வரலாறு உள்ளிட்ட பாடங்களையும் உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் பாஜக அரசால் திட்டமிட்டே நீக்கப்பட்டு உள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சுக்குநூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று குற்றம்சாட்டிய வைகோ, “வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்தின் வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்

Blogger இயக்குவது.