விமர்சிப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்தபின்னர் செய்கையில் பதிலடி- ஜீவன்!!

என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு, அதிகாரம் கிடைத்ததும் செய்கைமூலம் பதிலடி கொடுப்பேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தன்னை நம்புவதாகவும் மக்களுக்கும் தன்மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹற்றன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவ்ர தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அரசியலுக்கு அப்பால் இருவருக்குமிடையில் சிறந்த நட்புறவு இருந்தது.

எனது தந்தையின் மறைவுச்செய்தி கேள்வியுற்றதும் கண்கலங்கி நின்றார். எங்களுக்கு ஆறுதல் கூறி தூணாக இருந்தார். அதற்காக அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரையும் விமர்சிக்கக்கூடாது, குறைகூறும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது என்ற முடிவை நாம் எடுத்திருந்தோம். திட்டங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தோம்.

எனினும், எதிரணியினர் விமர்சிப்பதையே பிரசாரமாகச் செய்தனர். என்னை விமர்சித்தவர்களுக்கு என்னால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை விமர்சிக்க முடியாமல்போனது. ஏனெனில் அவர்களின் அறிவுமட்டம் அவ்வளவுதான்.

ஜீவன் தொண்டமான் சின்னப் பையன், சின்னத் தம்பி என விமர்சனம் செய்கின்றனர். இதே சின்னப் பையனிடம் அதிகாரத்தை தந்துபாருங்கள். மலையகத்தையே மாற்றிக்காட்டுகிறேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வளர்ந்து முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கே அவ்வளவு திமிர் இருக்குமானால் ஆறுமுகன் தொண்டமானின் அரவணைப்பில் வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?

ஆயிரம் ரூபாய் என்பது தொழிற்சங்கப் பிரச்சினை. ஆனால், அதனை அரசியல் மயப்படுத்திவிட்டனர். இதனால் எமது ஏனைய பிரச்சினைகள் மறைக்கப்பட்டன. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த சின்னப் பையனை நம்புகின்றனர். எனவே, எமது மக்கள் என்னை நம்பமாட்டார்களா?

நமது சமூகத்துக்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தரக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷதான்” என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.