காதலித்த பெண்ணையும் தந்தையையும் வெட்டிய நபர் தற்கொலை!

 

காதலை ஏற்க மறுத்த தந்தை மற்றும் மகள் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை – சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று (29) அதிகாலை ஒளிந்திருந்த சந்தேக நபர் குறித்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள ஆடைகள் தைக்கும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய கத்திக்குத்துக்கு இலக்கான விவாகரத்துப் பெற்ற 5 வயது பிள்ளை ஒன்றிற்கு தாயான (29-வயது) பெண்ணிற்கும் அதே நிறுவனத்தில் கடமைபுாிந்த தேத்தாத்தீவு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தருக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது.

குறித்த காதலுக்கு பெண் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததனால் இன்று அதிகாலை காரைதீவு பகுதிக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் ஒளிந்திருந்து காதலித்த பெண் மற்றும் பெண்ணின் தந்தையையும் கத்தியால் குத்தி படுகாயமடைய செய்த பின்னர் தப்பி சென்று தனது வீடு அமைந்துள்ள தேத்தாத்தீவு பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் பெண் மற்றும் அவரது தந்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அத்துடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் திருமணமான 12 வயதுப் பிள்ளை ஒன்றிற்கு தந்தை என்பதை மறைத்து காதலித்ததுடன் திருமண ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக தயாரான நிலையில் பெண்ணின் தந்தையினால் திருமணம் செய்த நபர் என கண்டறிப்பட்டார்.

இதயைடுத்து காதலித்த பெண் உரிய விவாகரத்தை பெற்ற பின்னர் திருமணம் பற்றி பேசமுடியும் என குடும்பஸ்தரிடம் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த அக்குடும்பஸ்தர் பெண் மற்றும் அவரது தந்தையை குத்தியுள்ளதாக காவல்துறைவிசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.