உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

 கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தகவல்களை பெறவுளம், அவர்களது சுகாதார நிலையை கண்காணிக்கவும் கல்வி அமைச்சு வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி www.info.moe.gov.lk என்ற வலையத்தளத்திற்கு செல்வதனுடாக, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து மாணவர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு தங்களது தகவல்களை பதிவுசெய்யும் மாணவர்களின் விபரம் பாதுகாக்கப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

இதேநேரம் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இதற்கமைவாக இந்த காலப்பகுதிக்குள் ஏதேனும் அனர்த்தம் அல்லது பாதிப்பின் காரணமாக பரீட்சைக்கு தோற்றுவது தடை ஏற்படுமாயின் இந்த மத்திய நிலையத்தில் தொடர்புகொள்ள முடியும்.

இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் துரித தொலைபேசி இலக்கமான 117 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இக் காலப்பகுதியில் 24 மணித்தியாலமும் செயற்படும்.

பரீட்சைகள் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் இந்த தொலைபேசியூடாக அறிவிக்க முடியும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.