தோழியுடன் வீட்டுக்கு சென்ற 18 வயது மாணவரை அடித்துக்கொன்ற கொடூரம்!

 இந்திய தலைநகர் டெல்லியில் தோழியுடன் சென்ற 18 வயது மாணவரை இளம்பெண்ணின் குடும்பத்தினரே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் அதர்ஷ் நகரை சேர்ந்த 18 வயது மாணவர் ராகுல் என்பவரே ஐவர் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

ராகுல் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். மேலும், இவர் தனது வீட்டில் டியூசன் கற்றுக்கொடுத்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில், ராகுல் மற்றும் அதே பகுதியில் வசித்துவரும் ஒரு இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், ராகுலின் நட்பு அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், தனது தோழியுடன் ராகுல் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணின் சகோதரன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடந்த 7-ம் திகதி இரவு அதர்ஷ் நகர் தெருவில் தனது தோழியுடன் சென்ற ராகுலை இடை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ராகுலுக்கும் அவரது தோழியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ராகுலை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராகுலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், படுகாயமடைந்த ராகுல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரங்களில் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பொலிசார் இளம்பெண்ணின் சகோதரன் மற்றும் உறவினர்கள் உள்பட மொத்தம் 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மரணமடைந்த ராகுலின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறிய டெல்லி துணைமுதல்மந்திரி மணீஷ் சிசோடியா,

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

மேலும், உயிரிழந்த ராகுலின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.