கணவனின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

 இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் மாமனார் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார் ஷில்பா.

நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஷில்பா இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

பொலிசார் அந்த கடிதத்தை கைப்பற்றிய நிலையில் அதில், என் தற்கொலைக்கு காரணம் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் என எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே என் மகளை சோனு மற்றும் அவர் பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்தனர்.

அதாவது, உனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாய்.

நீ என்னை விட்டு போய் விடு, எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி சோனு ஓராண்டாக ஷில்பாவை துன்புறுத்தினார்.

இந்த சூழலில் தான் மனம் வெறுத்து போய் ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் எங்களிடம் வந்தார் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சோனு மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.