கொரோனாவைத் தடுக்கும் வகையில் இலங்கை தயாரித்துள்ள புதிய ஆயுர்வேத மருந்து!

 கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து நோய் எதிர்ப்புப் பானத்தையும் மருந்துத் தூளையும் அறிமுகப்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் அனைத்தும் 100 சதவீத உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை எனவும், அவை ‘சதங்கா பனம்’ மற்றும் ‘சுவாதாரணி நோய்த்தடுப்பு பானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்த மருந்துகள் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

தற்போதைய நிலைமையில் மேற்கத்தேய மருத்துவத்தால் இன்னும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும், இந்தச் சவாலைச் சமாளிக்கக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் எமது சுதேச மருத்துவ அமைச்சுக்கு உள்ளது” – என்றார்.

இந்த மருந்துகள் நேற்று நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.