முன்னேறியது அடுத்த சுற்றுக்கு ஐதராபாத்!

 



மிகவும் பரபரப்பான போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் சலன்ஞர்ஸ் பெங்களுர் அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி குவாலிபையர் -2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் வோர்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரோயல் சலன்ஞர்ஸ் பெங்களுர் அணி சார்பாக தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலி 6 ஓட்டங்களுடனும் தேவ்தத் படிக்கல் ஒரு ஓட்டத்துடனும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினர். 


3.3 ஓவரில் 15 ஓட்டங்களுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களே எடுத்தது.

3 ஆவது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ஓட்டங்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மொயீன் அலி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைச்சதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். 

டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஷிவம் டுபே 8, வொஷிங்டன் சுந்தர் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றம் அடைந்தனர். 

நவ்தீப் சைனி 9 ஓட்டங்களுடனும் முகமது சிராஜ் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க, ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை பெற்றது. 


ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

 132 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வோர்னர், கோஸ்வாமி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். கோஸ்வாமி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்மிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார். 

வோர்னர் - மணிஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி தீர்மானித்தது. ஆனால் 5.4 ஓவரில் 43 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வோர்னர் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார். 


அதன்பின் ஆடம் ஜம்பா, சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க மணிஷ் பாண்டே 24 ஓட்டங்களுடனும் பிரியம் கார்க் 7 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இதனால் போட்டி பரபரப்பாக மாறியது.

ஆனால் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி சென்றது. 


இறுதி ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஐதராபாத் ஒரு ஓட்டம் எடுத்தது, 2 ஆவது பந்தில் ஓட்டம் கிடைக்கவில்லை. 3 ஆவது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் ஹோல்டர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.

கேன் வில்லியம்சன் 44 பந்தில் 50 ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 20 பந்தில் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.