யாழ் பல்கலை மோதல்! 7 பேருக்கு தண்டனை!


 யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபாரிசுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை செய்துள்ளது.

இதனடிப்படையில், நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட, பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946ம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

அவரது முன்மொழிவுகளைப் பேரவைக்குச் சிபாரிசு செய்வதென இன்று (18) இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு வருட காலத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும், 4 பேருக்கு ஆறு மாத காலத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்படுவதோடு, தண்டனைக்குரிய 7 பேருக்கும் வழங்கப்படும் அத்தனை நிதியுதவிகளும் நிறுத்தப்படல் வேண்டும், கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது போன்ற தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்ததன.

எனினும் இவற்றில் மாணவர்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துவதை தவிர ஏனைய சிபாரிசுகளைப் பேரவைக்குப் பரிந்துரைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை முடிவு செய்துள்ளது.

இந்த 7 பேர் தவிர, கடந்த மாதம் 10ம் திகதி முதல் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்ட ஏனைய 14 பேருக்கும் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் உள் நுழைவுத் தடை விலக்கப்பட வேண்டும் என்பதுடன், துணைவேந்தரினால் சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை வழங்கப்பட வேண்டும் என்றும், கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது போன்ற தண்டனைகளும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதன. பேரவையின் இறுதித் தீர்மபனத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கான தண்டனைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.