பாதீட்டை ஆதரித்தால் பணம் தருவதாக கூறிய பிள்ளையானின் தம்பி!


 வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமித்தமே பிரதேச சபையின் தவிசாளரால் இன்று (30) கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பிரதேச சபை தவிசாளரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பதினைந்து சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நேற்று (29) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கு மேலதிமாக நிதியினை செலவு செய்ததாக கூறினர். சபை நிதியினை எவ்வாறு செலவு செய்ய முடியும். இவ்வாறே சபையில் பல ஊழல்கள் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் சகோதரர் சபை உறுப்பினர்களில் சிலரை எங்களது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் நாங்கள் உங்களுக்கு பணம் வழங்குகின்றோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் முஸ்லிம் சபை உறுப்பினர்கள், தமிழ் சபை உறுப்பினர்கள் அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபை உறுப்பினர்களிடம் பணம் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்” என்று பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் குற்றம்சாட்டினார்.

“வாழைச்சேனை பிரதேச சபையின் பல ஊழல்கள் காணப்படுகின்றது. தவிசாளர் தலைமையில் செய்யப்பட்ட ஊழல்களை மறைப்பதற்காகவே வரவு செலவுத் திட்டத்தினை ஒத்தி வைத்துள்ளனர். பிரதேச சபையின் தவிசாளர் தன்னால் எந்தவித ஊழலும் செய்யப்படவில்லை என்றால் சபையை கூட்டி வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கலாம்.

முடியுமானால் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து அதனை வெற்றி கொண்டு காட்டுங்கள். எங்களிடம் உங்களின் நடவடிக்கைக்கு எதிரான பதினைந்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து காணப்படுகின்றனர். தோல்வியின் பயத்தின் காரணமாகவே தவிசாளர் வரவு செலவுத் திட்டத்திற்கான சபை அமர்வினை கால வரையறையின்றி ஒத்திவைத்துள்ளார்” என்று சபையின் பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன் தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் இருபத்தியொரு இலட்சம் ரூபாய் நிதிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முப்பத்தி மூன்று இலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறுகின்றார்கள். இது தொடர்பில் விளக்கம் கேட்ட போதும் இதுவரை எங்களுக்கு பதில் இன்னும் வழங்கப்படவில்லை” என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் (அஸ்மி) தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.