துப்பாக்கி முனையில் பெண்ணொருவர் வல்லுறவு!


 வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை பொலிஸ் அதிகாரியாக காண்பித்து, தனது பிள்ளைகளுடன் துங்கிக் கொண்டிருந்த இளம் தாயை துப்பாக்கி முனையில் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதுடன், வீட்டிலிருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையிட்ட நபருக்கு 22 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது மாத்தளை மேல் நீதிமன்றம்.

அதன்படி, பெண்ணின் வீடு புகுந்து பணம் மற்றும் நகைகளைத் திருடியதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அத்துடன், ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலும் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பிரதிவாதிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.300,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இழப்பீட்டை செலுத்தத் தவறினால் மேலும் இரு வருடம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மாத்தளை, களுதேவால பகுதியில் வசிக்கும் நபரொருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2005 ஜூன் 4 அல்லது அதை அண்மித்த நாளொன்றில் உக்குவளை, உக்குவெலவத்த பகுதியில் ஒரு பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததாக, 3 நபர்கள் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

2,3ஆம் சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஏற்கனவே ஒப்புக் கொண்டனர். அவர்களிற்கு மத்தளை உயர்நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை வழங்கி ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

பிரதான சந்தேகநபர், தான் நிரபராதி என குறிப்பிட்டிருந்தார். இதனால் வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டவர் ஒருவர், முதலாவது சந்தேகநபருக்கு துப்பாக்கியை வழங்கியதாக வாக்குமூலமளித்திருந்தார். தொடர்ந்த வழக்கில், முதலாவது சந்தேகநபர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சம்பவ தினத்தில், வீட்டில் ஜன்னல் வழியாக நுழைந்தவர், தன்னை பொலிஸ் அதிகாரியாக காண்பித்து, பெண்ணிடம் வாக்குமூலம் பெற வேண்டுமென மிரட்டினார்

அதன்போது, தனது 5 மற்றும், 6,10 வயது பிள்ளைகளுடன் பெண் உறக்கத்தில் இருந்தார். அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து சென்று, சிறிது தூரத்தில் ஒரு கால்வாயின் அருகே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.