வெளியேறியது ஐதராபாத் ; இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது டெல்லி


 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக இறுதிசுற்றை எட்டியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழையும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2 ஆவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டெல்லி கெப்பிட்டல்ஸை எதிர்கொண்டது. 

நேற்றிரவு அபுதாபியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

டெல்லி அணியின் ஆரம்ப வீரர்களாக மார்க்கஸ் ஸ்டொய்னஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

3 ஓட்டங்களில் பிடியெடுக்கும் கண்டத்தில் இருந்து தப்பித்து அதிரடி காட்டிய ஸ்டொய்னஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். 

தவானும் அதிரடி காட்ட அணியின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. அதனால் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ஓட்டங்களை குவித்தது டெல்லி.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். 

அதன்படி ஓட்ட எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தபோது ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ஸ்டொய்னஸ் மொத்தமாக 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார் களமிறங்கி துடுப்பெடுத்தாட 9.4 ஓவர்களில் டெல்லி அணி 100 ஓட்டங்களை தொட்டது. 

இதன் பின்னர் ரஷித்கான், வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் ஆகியோர் சாதுர்யமாக பந்துவீசியதால் அடுத்த சில ஓவர்களில் வேகமான டெல்லியின் ஓட்ட குவிப்பு சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சிம்ரன் ஹெட்மேயர் தவானுடன் ஜோர் சேர்ந்தார். ஹோல்டரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டனர். 

இதனால் ஓட்ட எண்ணிக்கை சற்று வேகமெடுத்தது. 19 ஆவது ஓவரின் போது, தவான் 78 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இறுதியாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.

190 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் டேவிட் வோர்னரும், பிரியம் கொர்க்கும் களமிறங்கினர்.

இரண்டாவது ஓவரின் முதல் பந்து வீச்சில் டேவிட் வோர்னர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து இரண்டு ஓட்டங்களுடன் நடையை கட்டினார். ரபடா வீசிய யோர்க்கர் பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. 

அடுத்து பிரியம் கொர்க் (17 ஓட்டம்), மனிஷ் பாண்டே (21 ஓட்டம்), ஜோசன் ஹோல்டர் (11 ஓட்டம்) சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதற்கு மத்தியில் கேன் வில்லியம்சன் அணியின் வெற்றிக்காக போராடினார். ஸ்டோனிஸ் உள்ளிட்டோரது ஓவர்களில் சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

அவருக்கு அப்துல் சமாத் ஒத்துழைப்பு கொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. முக்கியமான தருணத்தில் அதாவது ஓட்ட எண்ணிக்கை 147 ஆக உயர்ந்த போது வில்லியம்சன் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சமாத் 33 ஓட்டங்களிலும், ரஷித்கான் 11 ஓட்டங்களிலும், கோஸ்வாமி டக்கவுட்டுடனும் ரபடாவின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து, 17 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி முதன் முறையாக ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் கால் பதித்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.