‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல்!


 சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று  (25) அனுஷ்டிக்கப்பட்டது.

2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து நத்தார் திருப்பலி ஆராதானையின் பாேது இராணுவ ஒட்டுக்குழுவினரால் இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியினுடைய ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவயோகச்செல்வன் சாம்பசிவ குருக்கள், அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட எம்பி கோவிந்தன் கருணாகரம், முன்னாள் எம்பிகளான பொன்.செல்வராஜா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.