சிகப்பு விளக்கு - சிறுகதை!!

 


அந்த தெரு பிரதான சாலையிலிருந்து விலகி உள்பக்கமாக இருந்தது.எப்பொழுதும் அமைதி."மனங்கள் அமைதியாக இருந்ததா..?"என்றால் கதவிற்குள் செல்ல வேண்டும்.அன்று இருவர் வெள்ளைக்கலர் காரில் வந்து நின்றார்கள்.இந்த தெருவில் அகிலா வீடு எங்கே இருக்கிறது எனக்கேட்டார்கள்.தெருவில் சென்று கொண்டிருந்த மணிக்கு ஆர்வம் பொங்கிட அகிலா வீட்டை அடையாளம் காட்டினான்.

சுற்றிலும் சிமெண்ட்டால் பூசப்பட்டு சிமெண்ட் ஷீட்டுகள் போடப்பட்டிருந்தது.எப்பொழுதும் வெப்பமாகவே இருந்தது அந்த வீட்டு அறைகள்.எப்படிச் சம்பாதித்தாலும் இந்த சமூகம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உத்தியை அழகாக அமைத்திருக்கிறது.அப்படிதான் அகிலாவிற்கும் எவ்வளவு சம்பாதித்தாலும் தன்னை பாதுகாத்துக்கொள்ளவே சரியாகப் போய்விடுகிறது.

அகிலாவைப்பற்றியும் அவள் வீட்டைப் பற்றியும் பல இன்பமான தகவல்களை பரிமாறிக்கொண்டார்கள் அந்த தெரு முழுவதும்.அகிலா யாரிடமும் அவ்வளவாகப் பேசமாட்டாள்.தெற்கு பகுதியில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் மரபிலிருந்து எங்கள் ஊர் வாணிய செட்டியாருக்கு மருமகளாக வார்க்கப்பட்டாள்.வந்த புதிதில் நல்ல உடல்வாகு,யார் சென்றாலும் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு உடல் வளர்ந்துபோயிருந்தது.

வந்த சில வருடங்களில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்."வாழ்க்கையின் கைகளும் கால்களும் சும்மா இருக்குமா என்ன..?"சில நாட்களில் தன் கணவனோடு அகிலாவிற்கு முரண்பாடு ஏற்பட்டது.இரண்டு மனதிற்குள் செல்லும் இந்த வாழ்வு விரிசலைத்தாண்டி அகிலா அலையாகவும் அவள் கணவன் பாறையாகவும் பிரிந்தார்கள்.எப்பொழுதும் அகிலாவின் அலை பாறை மேல் வீசிக்கொண்டேயிருக்கும் சில மிக வேகமாகப் பாறையைத் தாண்டியும் விழும்.

இவள் வேலைப்பார்க்கும் இடங்களில் அனைவரிடமும் நெருக்கமாகப் பழகினாள். பெண்கள் சுதந்திரமாகப் பழகினால் நிறைய அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது இவளையும் விட்டுவைக்கவில்லை.கொஞ்சம் சத்தமான பேச்சு,சிரிப்பு அவளது கணவனுக்குப் பிடிக்கவில்லை.

நாகரீகத்தின் உச்சத்தை அடைந்தாள்.சாதாரண சேலையிலிருந்து சற்று அழகான சேலைக்கு மாறினாள்.தலை முடியை நெற்றியின் இறக்கத்தில் கொஞ்சம் ஸ்டைலாக விட்டுக்கொண்டாள்.உதட்டுக்குச் சாயங்கள்,உடலுக்குச் சாயங்கள் என நாகரீகம் பேசத்தொடங்கியது அவள் உடல்.

அவள் உடலின் அழகும் கூடியது.அது பிடிக்காத அவள் கணவன் இருக்கும் பொழுது, சில ஆண்கள் அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுச்செல்வதும் ஏற்றிச்செல்வதுமாக இருந்தது.

அதற்கு அவள் சொல்லும் காரணம் பேருந்து கிடைக்கவில்லை.இன்று கம்பெனி வாகனம் வரவில்லை என்று சொல்வது மேலும் அவனுக்கு வெறுப்பூட்டியது.இது முற்றிப்போனது.இனிமேல் இந்த நாகரீகத்தின் உச்சத்தோடு என்னால் பொருத்திக்கொள்ள முடியாது என்று முடிவிற்கு வந்து

முறைப்படி விவாகரத்து எதுவும் இல்லாமல் பிரிந்தார்கள்.

நிரந்தரமாகப் பிரிந்தார்கள்.அகிலா மட்டும் தன் குழந்தைகளோடு எங்கள் தெருவிலே இருந்தாள்.அகிலாவின் கணவன் எங்குச் சென்றான் என இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. ஒருவன் இறந்துவிட்டிருப்பான் என்றான்.வயதான ஒருத்தி காசி,ராமேஸ்வரம் எனச் சென்றிருப்பான் என்று கூறினாள்.அகிலாவின் கணவன் சென்றது அவளுக்கு வசதியாகப்போச்சு என்று பேசிக்கொண்டார்கள்.ஆனால் அகிலா அப்படி நினைத்தாளா என்று ஒருவரும் அவளிடம் கேட்கவில்லை.அகிலாவின் இரண்டு பெண்களில் முதலில் வளர்ந்தவளுக்குப் பிஞ்சு வயதிலே பாலியல் தொந்தரவு விளையாட்டாகக் கொடுக்கப்பட்டது.

இந்த சமூகம் தனியாக இருக்கும் பெண்களுக்கு எப்பொழுதும் பாலியல் சார்ந்த நிலையைத் தவிர வேறு எதனுடனும் பொருத்திப்பார்ப்பதில்லை.

அகிலா வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டெழ வெகுநாட்கள் ஆயிற்று.முதல் மகள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தாள். நான்கு ஐந்து பேர் செய்த காம கொடூரங்களில் விளைந்து வந்த சிறுமியின் உடல் கருகி போச்சு.

அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.காலத்தை ஏற்றுக் கொள்வதா,எதிர்ப்பதா என்ற போராட்டம்.அவளால் நீதி கேட்க முடியாது.இருந்தும் விரைந்தாள்.அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றவளை அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பார்த்துப் பிரமித்துப்போனார்.அவள் மனம் பிள்ளையைப் பறிகொடுத்துத் தவித்துக்கொண்டிருந்தது.

அவளுக்காகக் குற்றவாளிகளைப் பிடித்து சிறிது மிரட்டல் பாவனைச் செய்து விட்டார்.அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.இரண்டு நாட்கள் துக்கங்களுக்குப்பிறகு அகிலா, இன்ஸ்பெக்டர் முத்தோடு நெருங்கினாள்.சில நேரங்களில் போலீஸ் ஜீப்பில் வீடு வந்து இறங்கினாள்.இப்படியே ஒரு மனிதர்கள் விட்டு மனிதர்கள் எனத்தாவித் தாவி அவள் வாழ்வு சென்று கொண்டிருந்தது.மனிதச்சங்கிலியோடு தொடர்புகொண்டிருக்கிறது இந்த சிகப்பு விளக்கு.

அவளுடைய அழகான உடல் மற்றும் முகம் தாண்டி அவளுடைய மனதின் எல்லையை யாரும் தொடவில்லை.இவளுக்கு இப்படியே பழகிவிட்ட வாழ்க்கைச் சூழலை வயிற்றுப் பிழைப்பிற்கு எதையாவது பொருத்திக் கொள்ள வேண்டியதாயிருந்தது.இது மனதின் அடிப்படையைச்சார்ந்து இருக்கிறது.

உடல் தாண்டி செல்வது என்பது மரணமாகத்தான் இருக்கிறது.அப்படி மரணத்தை விரும்பியும் இருக்கலாம் அவள்.அவள் ஆண் சமூகத்தால் அழுத்தம் தரப்பட்டுக்கொண்டே இருக்கிறாள்.ஆண் சமூகத்தால் நிறைய முறை மரணமும் அடைந்திருக்கிறாள்.அதாவது செத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்வைச் சந்திப்பாள்.கடன் சொல்லும் வாடிக்கையாளர்களைப் பார்த்து சில நேரம் கத்துவாள்.

இப்படிச் செய்து சாப்பிட்டறதை விட சும்மா இருக்கலாம்.

நான்கு வீட்டிற்கு பத்து பாத்திரம் தேய்க்கலாம்.செத்துப்போகலாம். அனைத்தையும் செய்து பார்த்தவள்தான் அகிலா.உடம்பை வித்து பிழைக்கின்ற பிழைப்பு ஒரு பிழைப்பா? நல்ல கேள்விதான். ஆனால் அந்த விற்கிற உடம்பை வாங்குகிறது ஒரு பிழைப்பா?என்கிற கேள்விமட்டும் எழவேயில்லை.இப்படிப் பரிதாபப்படும் மனிதர்களைத் தாண்டி அகிலாபோன்ற நிறையப் பெண்களின் வாழ்க்கை காப்பாற்றப் படாமலும் கண்டுகொள்ளாமலும் நடந்தேறித்தான் வருகிறது.

சில சட்டங்களைத்தாண்டி சமூக ஒழுங்கை காலம் காலமாக இப்படித்தானே அமைத்துள்ளோம்.இதற்கு எடுத்துக்காட்டாக அறிஞர் அண்ணாவின் வாக்கியம் ஒன்றை தலைகீழாகச் சொல்வாள் அகிலா,அவன் ஒன்றும் உத்தமன் அல்ல,நான் ஒன்றும் பத்தினி அல்ல என்பாள்.சிரிப்பாள்.அந்த சிரிப்பில் நல்ல அங்கதம் இருக்கும்.

அவளுக்கு சமூகம் நிறையச் சிக்கல்களைத்தந்தது அவளைத் திருவிழாவில் சந்தித்தாலும்,கடைத்தெருவில் சந்தித்தாலும் ,பேருந்தில் சந்தித்தாலும் பாலியில் கண்ணோட்டத்தில் தள்ளுவார்கள்.ஆனால் அகிலாவிடம் பாலியல் விதிமுறைகள் சிலவற்றை வைத்திருந்தாள். தானாக யாரையும் தேடிப்போகமாட்டாள். அவளைத்தேடி வருபவர்களை மட்டும் நேசிப்பாள் அகிலா.கோலாகலமாக்கத் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அன்றைய நாள் அகிலாவின் வீடு தீப்பற்றி எரிந்தது.தீயணைப்பு வாகனம் ஒன்று தாமதமாக வந்தது.முழுவதுமாக எரிந்து தீக்கனல் அடங்கிப்போயிருந்து.அதில் கிடந்த சில கம்புகள் மட்டும் தகதகவென்று நெருப்பைக் கக்கியது.அதை அணைத்து விட்டுக் கிளம்பியது வாகனம்.

அகிலாவின் முகத்தில் கரிபூசிக்கொண்டு நைட்டியோடு நின்றிருந்தவளைக் கண்டு யாரும் பரிதாபப்படவில்லை.அவளைப்பாவப்பட்டவள் என்று பேசினார்கள்.

தகவல் அறிந்து தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவின் சைரன் பொருத்தப்பட்ட ஜீப் வந்து நின்றது.அங்கு விசாரணை நடந்து முடிந்து அவளை ஏற்றிக்கொண்டு சென்றது.அவளது இரண்டாவது மகள் பக்கத்து வீட்டில் படுத்திருந்தாள்.

காலை அகிலாவை ஏற்றிக்கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றது அந்த வாகனம்.தன் வீட்டிற்கு நிவாரணம் பெற விண்ணப்பம் ஒன்றோடு தொகுதி மந்திரி ஜானகி ராமனைச் சந்திக்கப் புறப்பட்டாள்.சில சந்திப்புகளில் தன் அழகு ஊடுருவிச் செல்கிறதோ என்னவோ அவள் வயிற்றுப்பசி ஊடுருவிச் சென்றுவிடுகிறது.ஜானகி ராமன் காரில் வந்திறங்கினாள் அகிலா.அவருடைய அலுவலகத்தில் சமையல் வேலைக்குப் பரிந்துரைக்கப்பட்டாள் அகிலா.எத்தனையோ சிகப்பு விளக்குப் பொருத்தப்பட்ட காரில் வந்திறங்கினாலும் அவளுக்கான உடல் சுரண்டலைத்தாண்டி அவளால் பெரிதாகச் சம்பாத்தியம் செய்யமுடியவில்லை.அகிலாவின் உடலை விரும்பியவர்கள் அவளுக்குச் சன்மானமாகப் பெரிய தொகையைத் தந்தால் அவள் இந்த நிலையைத் தொடரமாட்டாள்.ஆனால் அப்படி ஒருவரும் செய்யாமல் ஏழ்மையில் அவளை கிறங்கடித்து உடல் தேவையைத் தூண்டினார்கள்.

ஜானகி ராமன் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் தந்தார்.அகிலாவிற்குத் தெரியும் எத்தனையோ வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளைக் காது குளிர கேட்டு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமார்ந்து போனவள் அவள்.

ஓடினாள் ஓடிக்கொண்டேயிருந்தாள்.இளமை சரிய ஆரம்பித்தது.முன் பற்கள் சில வீழ்ந்தன.உடல் மெலிதாக வற்றியது.உடலில் ஹார்மோன்களின் நாட்டியம் குறைந்து போனது.அதற்குப் பிறகு அவளும் எந்த முயற்சியும் செய்யவில்லை.ஏதோ கிடைக்கும் வேலைக்குச் செல்வாள். வழக்கமாக வயதாகிவிட்டால் செய்யக்கூடிய செக்கியூரிட்டி வேலைக்குச் சேர்ந்தாள்.தன் மரண நாட்களை யோசிக்கத் துவங்கிய காலம் அது.அவளுடைய இரண்டாவது மகள் அஷ்டத்திற்குக் காதல் வயப்பட்டது. திருமணம் விருப்பப்படி செய்துகொண்டாள்.

சில நாட்களில் அகிலாவிற்கு அழகான பேத்தி பிறந்தாள் பெயர் மீரா.அஷ்டத்தின் கணவனுக்குச் சந்தேகம் அதே சந்தேகம் ஏற்பட அவர்களும் பிரிகிறார்கள்.சில குடும்பத்திற்கே உண்டான சாபக்கேடு என்று பேசிக்கொண்டார்கள் தெரு முழுவதும்.

அகிலாவிற்குத் தீராத துயரமாகிவிட்டது அஷ்டத்தின் வாழ்வு .தன் குடும்பத்தின் நிலையற்ற தன்மையையும் தன்னைப்போன்றே சுதந்திரத்தை விரும்பும் தன் மகளை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டவளுக்கு நிறைய ட்ராபிக் ஜாமில்  நின்று செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிறது.எரிந்துகொண்டிருந்த சிகப்பு விளக்கு நிறுத்தப்பட்டு பச்சை விளக்கு எரிகிறது.

ஜானகி ராமனைச்சந்திக்கிறாள்.அவருடைய வனப்பு குறையாமல் அப்படியே இருக்கிறது.ஒரு வேளை பணத்திலேயே இருப்பவர்கள் வயதும் உணவும் ஒரு பிரச்சனையே இல்லை என்பது புரிந்தது அவளுக்கு.தன் மகளுக்கு வேலை மனு ஒன்றை அளித்தாள்.

வேலைக்குச் சிபாரிசு செய்கிறேன் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குப் பரிந்துரைத்து விட்டார்.எப்படியோ அஷ்டத்தைக் காப்பாற்றிய உணர்வுகளோடு தாயும் மகளும் வீடு திரும்பினார்கள். பெண்கள் மேல் அக்கறை எடுத்துக்கொள்வது போன்று ஆரம்பித்தது பிரச்சனை.அஷ்டத்தோடு வேலைப்பார்த்த மேனேஜர் முதல் சீண்டலைத் தந்தார்.

சிகப்பு விளக்கு என்பதற்கு இரண்டு விளக்கம் சொல்லப்படுகிறது போராட்டமான வாழ்வு மற்றொன்று அபாயகரமான வாழ்வு.அப்படித்தான் திடீரென்று தொழிற்சாலையில் சிகப்பு விளக்கு எரிந்துகொண்டே சைரன் அடித்தது.

ஆறுமாதத்திற்கு ஒரு முறை அபாயமணியும் அந்த விழிப்புணர்வையும் சோதிப்பார்கள்.அந்த சோதனையின் போது இவர்கள் உள்ளிருந்து சமிஞ்சைகள் தந்தார்கள்.மேனேஜரும் அஷ்டமும் கைகோர்த்து ஓடிவரத்துவங்கினார்கள்

இவர்களுக்குள் விளக்கு எரியத்தொடங்கியது.அஷ்டத்தை ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டுச்சென்றார் மேனேஜர்.அஷ்டத்தைத் தேடி ஒரு சிலர் இரவு நேரங்களில் வரத்தொடங்கினார்கள். 

அகிலாவிற்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை தன் மகளின் செயல்.மரபணுவில் இந்த மரபு கடத்தப்படுவதை விரும்பாமல் அஷ்டத்தோடு சண்டையிடுவாள்.இதையெல்லாம் மறக்கச் சுற்றுலா சென்று வரலாம் என முடிவெடுத்து

கிராமத்திலிருந்து புறப்பட்ட ஆன்மீக சுற்றுலா சென்றார்கள்.அன்று வெள்ளைக்கலர் காருக்கு வழிகாட்டிய மணியும் அவர்கள் கூட்டத்திலிருந்தான்.ராமேஸ்வரம் சென்றார்கள்.

அங்கு மணி எதிர்பார்க்காதது ஒன்று நடந்தது.

வேனை விட்டு இறங்கி சில கடன்களை முடித்துக்கொண்டு அமைதியாக இருந்த சமுத்திரத்தில் குளித்தார்கள்.பிறகு பாவம் போக்கும் ஒவ்வொரு கிணறாகக் குளித்துவிட்டு கோவிலுக்குள்  அனைவரும் அவர் அவர் சகாக்களுடன் சென்றார்கள்.

அங்கு வரிசையில் அமர்ந்திருந்தவர்களைச் சந்நியாசி என்பதா? பிச்சைக்காரர்கள் என்பதா? தெரியவில்லை மணிக்கு. அந்த வரிசையில் தீடிரென்று அகிலாவின் கணவன் சேகரைச் சந்தித்த மணி கண்ணீர்விட்டான்.சேகரும் அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தான்.அவனுடைய முன்னங்கைகளில் அகிலா என்ற பச்சை குத்தப்பட்ட எழுத்துகள் அவனை அடையாளம் காண்பித்தது.சட்டென்று துணியால் கைகளை மூடிக்கொண்டான்.

"அண்ணே…" என்று பாசமாக அழைத்தான் மணி. "இருடா மணி…" என்று சற்றுத்தள்ளி பின்புறம் உள்ள தனிமையான இடத்திற்குச் சென்று ஒரு மண்டபத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.தனது கிராமத்தை அக்கறையாக விசாரித்தான் சேகர்.அவனுக்குத் தெரிந்த சிலர் இறந்து போன செய்தியையும் பெரிய மகள் இறந்து போன செய்தியையும் கேட்டுத்துடித்தான்.

அனைத்து விஷயங்களையும் மணி சேகரிடம் சொன்னான்.அகிலாவும்,அஷ்டமும் சேகரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தாண்டிச்சென்றார்கள்.கவனிக்கவும் இல்லை.பொங்கல் விடுமுறையில் அஷ்டமும் அவளது குழந்தை மீராவும்,அகிலா அக்காவும் வந்துள்ளதாகத் தெரிவித்தான் மணி.சந்நியாசிகள் கூட்டத்தில் வாழ்ந்த சேகருக்கு வருத்தம். எப்படியோ நம்மைக் கண்டுபிடித்து விட்டானே என்று.

“சரி… வாங்க அண்ணே  வீட்டிற்குப் போகலாம்” என்றான் மணி.உட்சபட்ச வேதனையாக ஒலித்தது அந்த வார்த்தைகள் சேகருக்கு. "கோவிலுக்கு உள்ளே சென்று வா நான் இங்குதான் அமர்ந்திருப்பேன்" என்று மணியை அனுப்பிவைத்தான் சேகர்.அவர்கள் தெய்வ வழிபாடுகளை முடித்து விட்டு வர சில மணி நேரங்கள் ஆனது.அப்பொழுது மீராவைக் காணவில்லை என வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு திசையில் தேடினார்கள்.

மணி கோவிலுக்குள் தேடிவிட்டு,சேகர் அமர்ந்திருந்த இடத்தில் வந்து பார்த்தான்.அங்குக் குழந்தை மீராவையும் காணவில்லை.சேகரையும் காணவில்லை.

அடர்த்தியான கற்பூரத்தின் சிகப்பு ஜுவாலை அனைத்திற்கும் விடை சொல்வது போல் எரிந்து கொண்டிருந்தது.தேடித்தேடி அகிலா மற்றும் அஷ்டம் அழுது, அழுது இருவர்  குரலும் வற்றிப்போனது. வழக்கமாக சைரன் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்,போலீஸ்வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் செல்வதும்,வருவதுமாக இருந்தது.

கோவிலிருந்து கிழக்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை ஓரத்தில் சிதைந்த இரண்டு சடலங்களில் ஒதுங்கியிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அகிலாவோடு அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்தனர். இறந்து போன பிரேதங்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை.மீன்கள் அரித்திருந்தது.அதைப்பார்த்தவுடன் அகிலாவும், அஷ்டமும் அழுதார்கள்.

சேகரின் பச்சைகுத்திய கைகளில் எந்த எழுத்துகளும் இல்லை.மீராவைக் கண்டுபிடித்த அகிலாவால் இன்னொரு பிரேதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இரண்டுபேர் நீண்ட படுக்கையில் வைத்து ஆம்புலன்ஸில் இரண்டு பிரேதங்களை ஏற்றினார்கள்.சிகப்பு விளக்கு சத்தத்துடன் புறப்பட்டது வாகனம்.

பிரேதப் பரிசோதனை கூடத்தில் முன் சிகப்பு விளக்கு  எரிந்தது.இறந்து போன சடலங்களின்  உடல்கூறுகளுக்கு விளக்கம் தந்து கொண்டிருந்தது அங்கிருந்து வந்த போஸ்மோர்டம் ரிப்போர்ட்.ஆனால் உடல் கூறுகளின் மனச்சுமையைச் சொல்லவேயில்லை போஸ்மோர்டம் ரிப்போர்ட் இன்றுவரை. மணியாலும் எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை. 

அஷ்டம் அழுதுகொண்டே அவள் பையிலிருந்த மீராவின் உடைகளை எடுத்து இராமேஸ்வரம் கடலில் வீசிவிட்டு தலை மூழ்கினாள். அங்கிருந்து மீராவின் பிரேதத்தோடு அனைவரும்  சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.


ப.தனஞ்ஜெயன்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.