கஜேந்திரகுமாருடன் இராஜாங்க அமைச்சர்கள் வாக்குவாதம்!


 இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்  இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான தமிழர் எழுர்ச்சி பேரணி இடம்பெற்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் எம்.பியுடன் வாக்குவாதப்பட்டனர்

"இன்றும் இனப்படுகொலை" என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்ட போதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் எம்.பி வாக்குவாதப்பட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதான பத்து கோரிக்கைகளை முன்வைத்து சிவில் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியானது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் குறித்த பத்து காரணங்கள் மாத்திரமே எமது பிரதான கோரிக்கைகள் அல்ல. மேலும் நான்கு உப கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் வடக்கு கிழக்கு பூமி தமிழ் பேசும் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். தமிழர்களுக்கான தனித்தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் கீழ் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமையையும் இன்னும் அது தொடர்கின்றது என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த உண்மைகள் மறைக்கப்பட முடியாது என உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா :- இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், இன்றும் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி கூறுகின்றார். அவர் எதனை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகின்றார் என தெளிவில்லை என கேள்வி எழுப்பினார்?

இதற்குப் பதில் தெரிவித்த கஜேந்திரகுமார் எம்.பி :- இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை கொள்வது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலை என்றே கருதப்படும்.

2009 ஆம் ஆண்டு வரையில் உயிர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதை போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலனித்துவ கொள்கையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தொல்பொருல் திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர், இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதும் இனப்படுகொலையாகும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா :- ஆனால் எமக்கு தெரிந்தவரையில் இனப்படுகொலை என்பது அதிகளவான மக்களை கொன்று குவிப்பதாகும் என்றார். இதன்போது ஆளும் தரப்பில் இருந்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் :- இனப்படுகொலை என்பது எமக்கு தெரிந்த வரையில் திட்டமிட்ட கொலையாகும்.

அதிகளவான மக்களை அல்லது ஒரு இனக்குழுவை கொள்வது இனப்படுகொலை என அர்த்தப்படும். ஆனால் நீங்கள் கூறும் காரணிகளுக்கு இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்றாகும். எனவே அதனை திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொலைக்கான வரைவிலக்கணம் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. எந்த விதத்திலும் இதற்கான வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியும். ரோமானிய பிரகடனத்தின் ஐந்தாம் உறுப்புரையை வாசியுங்கள்.

ஹர்ஷ டி சில்வா :- இனப்படுகொலை என்ற வார்த்தையை நீங்கள் சரளமான விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் ஒரு தகுதியான சட்டத்தரணி, எனக்கு எவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது தெரியும். இனப்படுகொலை நடந்தது. அதற்கான நியாயத்தை கேட்கிறோம். இதற்கான சாட்சியில் நானும் ஒருவன்,  அதேபோல் இன்றும் எமது அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. அதனையே நான் அவ்வாறு கூறுகின்றேன்.

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் :- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. நீங்கள் கூறும் காரணிகளுக்கு பொருத்தமான வார்த்தை இதுவல்ல.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் சட்ட முறைமைக்கு அமையவே பேசுகிறேன். நீங்கள் ரோமானிய பிரகடனத்தை பாருங்கள். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டை ஏன் உங்களால் விசாரிக்க முடியாதுள்ளது. முதலில் அதனை செய்யுங்கள்.

ஹர்ஷ டி சில்வா :- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.அது பாரதூரமான வார்த்தை கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் மிகவும் பொறுப்புடன் இந்த இடத்தில  பயன்படுத்துகிறேன். உங்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், எதிர்க்கட்சி தலைவரும் ஆளும்கட்சி தலைவரும் வாருங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவோம். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதா இல்லையா என விவாதிக்கலாம். அதற்கு ஏன் அஞ்சுகிறீர்கள்.  

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் :- இன்றைய விவாதத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத காரணிகளை பேச வேண்டாம்.

கஜேந்திரகுமார் எம்.பி:- நீங்கள் எனது உரையை தடுக்க வேண்டாம் என்றார்.

இதன்போது சபையை வழிநடத்திய அஜித் ராஜபக் ஷ எம்.பி  :- நீங்கள் விடயத்திற்கு பொருத்தமாக பேசுங்கள் அப்போது இந்த குழப்பங்கள் எதுவும் எழாது. நீங்கள் பொருத்தமில்லாத விடயங்களை பேசுவதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்காக அதிக நேரத்தை வழங்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சாந்த பண்டார எம்.பி :- கஜேந்திரகுமார் எம்.பியின் இனப்படுகொலை என்ற வார்த்தை பிரயோகம் பொருத்தமானதல்ல,இலங்கையில் அவ்வாறன ஒரு இனப்படுகொலை இடம்பெறவில்லை, இனியும் இடம்பெறாது. எனவே அவரது வார்த்தையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா :- பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாம் பேசும் வார்த்தைகள் என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும்.

ஒருவர் பேசியதை நீக்க வேண்டுமென  இன்னொருவர் கூற முடியாது. ஆனால் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியா தவற என்பதை வார்த்தைகளை பயன்படுத்தும் உறுப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அடுத்த தடவை நீங்கள் பேசும் போது அவதானமாக பேசுங்கள் என்றார். இதனை அடுத்து ஆளும் கட்சியில் பலர் கஜெந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கருத்துடன் முடன்பட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.