கைத்தெறி நெசவு உற்பத்தியை மேம்படுத்த திட்டம் !


 மண்முனை தென் எருவில்பற்று(களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமம் கைத்தெறி நெசவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை தென் எருவில்பற்று(களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

எருவில் கிராம பொதுமக்களது பிரசன்னத்துடன் கைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வானது மிகவும் கோலாகலமாக பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிராம மட்டத்தில் இயங்கும் உற்பத்தியாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களை அந்த துறையில் மேலும் வளர்ச்சி நிலைக்கு கொண்டுசெல்லல்,தொழில் முயற்சியாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதன் ஊடாக கிராமத்தில் இருந்து ஏற்றுமதி என்னும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த சுய தொழில் முயற்சியாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் குறைகளை அதிதிகள் செவிமடுத்ததுடன் அவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் நிவர்த்திப்பது மற்றும் குறைகளை நிவர்த்திப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் எருவில் பகுதிகளில் உற்பத்திசெய்யப்படும் கைத்தறி ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவற்றினையும் அதிதிகள் பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.